பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?: ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
பாமக: ``அன்புமணி நீக்கம்; ராமதாஸ் அறிவிப்பு செல்லாது'' - வழக்கறிஞர் பாலு சொல்லும் காரணம் என்ன?
பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உள்கட்சிப் பூசல் நிலவி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கட்சி இரண்டு அணிகளாகச் செயல்பட்டு வருகிறது.
இதனிடையே அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை குழு கூறிய 16 குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்குமாறு கால அவகாசத்தை ராமதாஸ் கொடுத்திருந்தார். ஆனால் அன்புமணி எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை.
குற்றச்சாட்டுக்குப் பதில் அளிக்காத நிலையில் அன்புமணி பாமகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்திருக்கிறார்.

இதற்கு விளக்கமளிக்கும் வகையில் அன்புமணி தரப்பு பா.ம.க செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, ``பாட்டாளி மக்கள் கட்சியின் விதிகளின்படி, கட்சி சட்டத்தின்படி நிறுவனருக்கு நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளக்கூடிய அதிகாரம் வழங்கப்படவில்லை.
பதவி நீக்கம் செய்வது, கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட எந்த முடிவுகளாக இருந்தாலும், பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட தலைவருக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது.
எனவே இன்றைக்கு ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு, கட்சி விதிகளுக்கு எதிரானது. பா.ம.க-வை எந்த விதத்திலும் இந்த அறிவிப்பு கட்டுப்படுத்தாது.
கட்சித் தலைவராக அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து செயல்படுவார். கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி மாமல்லபுரத்தில் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது.
அந்தக் கூட்டத்தில், 'தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கட்சியின் அமைப்புத் தேர்தலை நடத்துவதற்கான சூழல் இல்லை.
எனவே கட்சியின் தலைவர், செயலாளர், பொருளாளர் என மூன்று பேருடைய பதவிக்காலத்தையும் 2026 ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கும் தீர்மானம்' கொண்டுவரப்பட்டது.
அந்தத் தீர்மானம் பொதுக்குழு உறுப்பினர்களால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு வெளியிடப்பட்டது.

அந்தத் தீர்மான அறிக்கையையும், பா.ம.க சார்பில் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு ஆகஸ்ட் மாதம் முறைப்படி தெரிவித்தோம்.
எங்களின் விளக்கத்தைத் தேர்தல் ஆணையம் உரிய விதத்தில் ஆய்வு செய்து, பா.ம.க-வின் தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிக் காலத்தை நீட்டித்து உத்தரவு பிறப்பித்து, முறைப்படி எங்களுக்கு வழங்கியிருக்கிறது.
அதன்படி பா.ம.க-வின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தொடர்கிறார். தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தின் படியும், கட்சியின் விதிகளின் படியும் ராமதாஸ் அறிவிப்பு செல்லத்தக்கதல்ல.
அன்புமணி ராமதாஸுக்கு உளவு பார்க்கும், ஒட்டுக் கேட்கும் பழக்கமில்லை. அதில் அவருக்கு விருப்பமும் கிடையாது. ஒருவேளை அப்படி உளவு பார்த்திருந்தால் இப்போது நடந்துகொண்டிருக்கும் எந்தச் சூழலும் நடந்திருக்காது" என்றார்.