``இந்தியாவிற்கு உதவ எந்த நாடும் வரவில்லையே ஏன்?'' - மத்திய அரசிடம் கார்கே அடுக்கும் கேள்விகள்!
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை மத்திய அரசு நடத்தியது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா முழுக்க உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்தன.
இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல் நிறுத்தம் எட்டப்பட்ட பின்னர், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், 'ஆபரேஷன் சிந்தூருக்கு முன், அதுகுறித்து பாகிஸ்தான் அரசுக்கு தெரிவிக்கப்பட்டது' என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகிறார் மத்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மத்திய அரசிடம் சில கேள்விகளை எழுப்பியுள்ளார்,
"* கடந்த 11 ஆண்டுகளில், பிரதமர் மோடி 72 நாடுகளுக்கு 151 முறை வெளிநாட்டுப் பயணம் செய்திருக்கிறார். இதில், அமெரிக்காவிற்கு மட்டும் 10 முறை சென்றுள்ளார். இருந்தும், மோடி அரசின் வெளியுறவுத் துறை கொள்கையின் கீழ், நமது இந்தியா தனியாகவே நிற்கிறது. ஆக, வெளிநாடுகளுக்கு செல்வதும், அங்கே போட்டோகளுக்கு போஸ் கொடுப்பது மட்டுமே பிரதமரின் வேலையா?
*சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு 1.4 பில்லியன் டாலர்களை கடனாக வழங்கியுள்ளது. ஆனால், யாரும் இந்தியாவின் கூற்றுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லையே, ஏன்?

* இந்த மாதிரியான சூழல்களில் பாகிஸ்தானின் முகத்திரையைக் கிழிக்க இந்தியாவிற்கு சர்வதேச நாடுகளின் உதவி தேவைப்பட்டது. ஆனால், எந்த நாடும் நமது உதவிக்கு வரவில்லையே ஏன்?
* அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியது குறித்து மக்களுக்கு சரியான தகவல்களை கொடுக்காமல் இன்னமும் மோடி ஜி உண்மைகளை மறைந்துகொண்டிருக்கிறார்" என்று மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.