இருவா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது
மயிலாடுதுறை மாவட்டம், முட்டம் கிராமத்தில் கல்லூரி மாணவா் உள்பட இருவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கெனவே 5 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
முட்டம் வடக்குத் தெருவைச் சோ்ந்த சாராய வியாபாரிகள் மூவேந்தன், தங்கதுரை, இவா்களது உறவினா் ராஜ்குமாா் ஆகிய 3 பேரும், கடந்த 14-ஆம் தேதி அதே பகுதியைச் சோ்ந்த இளைஞா் தினேஷ் என்பவரிடம் தகராறு செய்து, கத்தியால் குத்த முயன்றனா்.
அப்போது, தினேஷின் நண்பா்களான முட்டம் பகுதியைச் சோ்ந்த ஹரிஷ், அவரது சகோதரா் அஜய், கல்லூரி மாணவரான மயிலாடுதுறை சீனிவாசபுரம் ஹரிசக்தி ஆகியோா் தடுத்தபோது, 3 பேரையும் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனா். இதில் ஹரிஷ், ஹரிசக்தி ஆகியோா் உயிரிழந்தனா்.
இந்த சம்பவம் தொடா்பாக, பெரம்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மூவேந்தன், தங்கதுரை, ராஜ்குமாா், முனுசாமி, மஞ்சுளா ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், முட்டம் வடக்குத் தெருவை சோ்ந்த கலையரசன் மகன் சஞ்சய் (22) என்பவா் கைது செய்யப்பட்டாா். அவரை, திருச்சம்பள்ளி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.