ரூ.2500 மகளிா் உதவித் தொகை விவகாரம்: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்
புகைப்பிடிக்காதவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய்! காரணம் என்ன?
புகைப்பிடிக்காதவர்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் அதற்கான காரணம் குறித்தும் சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
லான்செட் மருத்துவ இதழில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
உலகளவில் புற்றுநோய் இறப்புகளில் நுரையீரல் புற்றுநோய் 5-வது இடத்தில் உள்ளது. நுரையீரல் புற்றுநோய்க்கு புகைப்பிடித்தல், புகையிலை பயன்படுத்துதல் உள்ளிட்டவை முக்கியக் காரணங்களாகக் கூறப்பட்டாலும் சிகரெட் அல்லது புகையிலை பயன்படுத்தாதவர்களிடையேயும் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துள்ளது.
குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் வசிப்பவர்கள் நுரையீரல் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகில் புகைப்பிடிப்பவர்களிடையே நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு குறைந்துவரும் அதேநேரத்தில் புகைப்பிடிக்காதவர்களில் நுரையீரல் புற்றுநோயின் விகிதம் அதிகரித்துள்ளதாக சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
இதற்கு காற்று மாசுபாடுதான் முக்கியக் காரணம் என்று புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது புகைப்பிடிக்காதவர்களுக்கு காற்று மாசுபாட்டினால் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிக்க | கர்ப்பிணிகளிடையே அதிகரிக்கும் தைராய்டு! காரணங்கள், சிகிச்சைகள் என்னென்ன?
2022 முதல் உலக அளவில் உள்ள தரவுகளில் இருந்து, நுரையீரல் புற்றுநோய்களில் 4 துணைப் பிரிவுகளை வகைப்படுத்தியுள்ளனர்.
அடினோகார்சினோமா (சளி உற்பத்தி செய்யும் சுரப்பி/செல்களில் ஏற்படும் புற்றுநோய்),
ஸ்குவாமஸ் செல் கார்சினோமா (ஒரு வகை தோல் புற்றுநோய்);
சிறிய செல் கார்சினோமா (அரிய, வேகமாக வளரும் நுரையீரல் புற்றுநோய்), மற்றும்
பெரிய செல் கார்சினோமா (ஒரு வகை நுரையீரல் புற்றுநோய்).
சமீபத்திய ஆண்டுகளில், பெரும்பாலான நாடுகளில் இளைய தலைமுறையினரிடையே குறிப்பாக பெண்களிடையே நுரையீரல் அடினோகார்சினோமா புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
கிழக்கு ஆசிய நாடுகள், அதிலும் சீனாவில் காற்று மாசுபாட்டால் நுரையீரல் அடினோகார்சினோமா பாதிப்பு அதிகமுள்ளது. உலகளவில் நுரையீரல் புற்றுநோய் இறப்புக்கு, அதன் துணை பிரிவான நுரையீரல் அடினோகார்சினோமா புற்றுநோய் முக்கியக் காரணமாக இருக்கிறது.
2022-ல், உலகளவில் 2,480,675 நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் பாதிப்பு?
உலக அளவில் காற்று மாசுபட்டால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதால் புகைப்பிடிக்காதவர்களிடையே நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருவது கவலையளிப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
காற்று மாசுபாடு காரணமாக, புகைப்பிடிப்பவர்களுக்கும் புகைப்பிடிக்காதவர்களுக்கும் சம அளவில் புற்றுநோய் அறுவை சிகிச்சைகள் தேவைப்படுவதாகவும், இதில் 50 வயதுக்குள்பட்ட நோயாளிகள் அதிகம் இருப்பதாகவும் கூறுகின்றனர்.
ஆசிய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ருச்சி சிங் கூறுகையில், 'ஒரு காலத்தில் நுரையீரல் புற்றுநோய், புகைப்பிடிப்பவர்களின் நோயாகக் கருதப்பட்டது. ஆனால் இப்போது மாசுபட்ட காற்று உள்ளிட்ட சுற்றுச்சூழல் காரணிகளால் புகைப்பிடிக்காதவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதால் புற்றுநோய் பரிசோதனைகளை விரிவுபடுத்த வேண்டியது அவசியம்' என்கிறார்.
அடினோகார்சினோமா நுரையீரல் புற்றுநோய், 2022-ல் ஆண்களிடையே 45.6%, பெண்களிடையே 59.7% இருந்ததாக லான்செட் அறிக்கை தெரிவித்துள்ளது.
புகைப்பிடிக்காதவர்களிடையே நுரையீரல் புற்றுநோய்களில் அடினோகார்சினோமா வகை புற்றுநோய் 70% வரை உள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகளவில் புதிதாக 1,572,045 ஆண்களுக்கும் 9,08,630 பெண்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.