விருதுநகர்: அதிமுக பொதுக்கூட்டம்; மேடையில் கட்சித் தொண்டரைத் தாக்கிய முன்னாள் அம...
இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்குதான் எனது ஆதரவு! -மில்லர்
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நான் நியூசிலாந்து அணிக்குதான் ஆதரவு அளிப்பேன் என்று தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இரண்டாவது அரையிறுதியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது.
முதலாவதாக பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 362 ரன்கள் குவிக்க, அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்க அணியினர் 312 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவினர். அந்த அணியில் மில்லர் மட்டும் சதம் விளாசி அணிக்கு ஆறுதல் அளித்தார்.
இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபிக்கான போட்டி அட்டவணையில் தனக்கு உடன்பாடு இல்லை என தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் துபையில் நடைபெற்று வருகிறது. இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடத்தப்பட்டன.
இதையும் படிக்க: நான் இதுவரை கண்டிராத சிறந்த சேஸர் விராட் கோலி! -ஸ்டீவ் ஸ்மித் புகழாரம்
அட்டவணையில் குழப்பம்
லீக் சுற்றில் பி-பிரிவில் அரையிறுதி அணிகள் முடிவு செய்யப்பட்டிருந்தாலும், ஏ பிரிவில் இந்தியா - நியூசிலாந்து அணிகளின் வெற்றி - தோல்விக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா இரண்டு அணிகளும் துபைக்குச் சென்றன. பின்னர் கடைசிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதால் தென்னாப்பிரிக்க அணி மீண்டும் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டது.
மார்ச் 1 ஆம் தேதி பாகிஸ்தானில் இங்கிலாந்துடன் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 2 ஆம் தேதி துபை சென்றுவிட்டு மீண்டும் பாகிஸ்தான் வந்து 5 ஆம் தேதி நியூசிலாந்துடன் விளையாடியது. இது நல்ல சூழல் அல்ல என்று அதிரடி ஆட்டக்காரர் மில்லர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இதுபற்றி மில்லர் கூறுகையில், “எங்களைவிட (தென்னாப்பிரிக்கா) நியூசிலாந்து சிறந்த அணி என்றுதான் தோன்றுகிறது. பாகிஸ்தானுக்கும் துபைக்கு ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் தான் பயண நேரம். ஆனால், இது சிறப்பானது அல்ல.
இங்கிலாந்து போட்டி முடிந்ததும் மாலை 4 மணிக்கு துபைக்குச் சென்றோம். பின்னர் நாங்கள் இந்தியாவுடன் விளையாடவில்லை என்று தெரிந்ததும் காலை 7.30 மணிக்கு பாகிஸ்தான் வந்துவிட்டோம். இது சிறந்தல்ல. தொடர்ந்து அங்கும் இங்கும் பறந்துகொண்டிருப்பது நல்லதல்ல.
இதையும் படிக்க: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் பிரைடன் கார்ஸுக்கு பதிலாக முல்டர் சேர்ப்பு!
எங்களுக்கு ஓய்வெடுக்கக்கூட நேரம் கிடைக்கவில்லை. தொடக்கத்தில் நன்றாக விளையாடினாலும் நடுவில் சில விக்கெட்டுகளை விட்டுவிட்டோம். இதுவே தோல்விக்கான முழுக் காரணம்.
எல்லோரும் அவர்களுக்கான சிறந்ததை செய்ய முயற்சி செய்வார்கள். இந்தியாவுக்கு எதிராக மீண்டும் ஒரு போட்டியில் விளையாட வேண்டும் என்று நினைத்தோம். ஆனால், அது முடியவில்லை. நான் உங்களிடம் நேர்மையாகச் சொல்வேன். நான் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை ஆதரிப்பேன் என்று நினைக்கிறேன்” என்றார்.
இந்திய அணிக்கான அனைத்து ஆட்டங்களும் துபை பன்னாட்டு மைதானத்திலேயே நடத்தப்பட்டன. அரையிறுதிக்கு முன்னதாக இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இந்த துபை மைதானத்தில் மோதியிருந்தன. ஆனாலும், நியூசிலாந்து அணி தனது 3 லீக் ஆட்டங்கள் மற்றும் அரையிறுதி என வெவ்வேறு மைதானங்களில் (லாகூர், ராவல்பிண்டி, கராச்சி) விளையாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஃபிபா உலகக்கோப்பை பரிசுத்தொகை ரூ.8,700 கோடி!