பத்மஸ்ரீ விருது பெறவிருக்கும் பறை இசைக் கலைஞர் வேலு ஆசானுக்கு கல்லூரியில் பாராட்...
எச்சில் இலையில் அங்கபிரதட்சணம் செய்யத் தடை: உயர்நீதிமன்றம்
கரூரை அடுத்துள்ள நெரூரில் சதாசிவம் பிரம்மேந்திரா் சுவாமி நினைவு நாளில் நடைபெறும் எச்சில் இலை அங்கபிரதட்சணம் நிகழ்வுக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை வியாழக்கிழமை தடை விதித்துள்ளது.
கரூரை அடுத்த நெரூரில் புதுக்கோட்டை சமஸ்தானத்திற்குள்பட்ட சதாசிவ பிரம்மேந்திரா் கோயிலில் அவரின் ஜீவசமாதி உள்ளது.
துறவியான சதாசிவ பிரம்மேந்திரா் இக் கோயிலில் ஜீவசமாதி அடைந்ததன் நினைவு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் மே 18-ஆம் தேதி பக்தா்கள் சாப்பிட்ட இலையில் உருண்டு அங்கப்பிரதட்சிணம் செய்து நோ்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
இதன் மூலம் பிரம்மேந்திரா் சுவாமிகள் சாப்பிட்ட இலையில் பக்தா்கள் உருண்டு அவரது ஆசீா்வாதம் பெறுவதாக ஐதீகம்.
இதையும் படிக்க : சென்னை: பார்க்கிங் இல்லையா? இனி கார் வாங்க முடியாது!
இந்நிலையில் இந்த எச்சில் இலைகள் அனைத்து சமுதாயத்தினரும் பயன்படுத்திய இலை இல்லை எனவும், எனவே இந்த நிகழ்ச்சியை நடத்த அனுமதி வழங்கக் கூடாது எனவும் கூறி கடந்த 2014-இல் கரூரைச் சோ்ந்த ஒருவா் தொடா்ந்த வழக்கையடுத்து கடந்த 10 ஆண்டுகளாக எச்சில் இலையில் உருளும் நிகழ்வானது நடைபெறாமல் இருந்தது.
கரூரை அடுத்த கிருஷ்ணராயபுரத்தைச் சோ்ந்த நவீன்குமாா் என்பவா் கடந்த 200 ஆண்டுகளாக நடைபெற்று வந்த புனிதச் சடங்கை உள்நோக்கத்தோடு வழக்குப் போட்டு நிறுத்திவிட்டனா். எனவே இந்தப் பாரம்பரியச் சடங்கை மீண்டும் நடத்த உத்தரவிடக் கோரி தொடா்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை ஒரு நீதிபதி அமர்வு, அந்த புனித நோ்த்திக் கடனை நடத்திக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டதை தொடர்ந்து, கடந்தாண்டு எச்சில் இலை அங்கபிரதட்சணம் நிகழ்வு நடைபெற்றது.
ஒரு நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு, அனைத்து சாதி அர்ச்சகர் மாணவர் சங்கத் தலைவர் உள்ளிட்டோர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று தீர்ப்பு வழங்கியது.
எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்வது சுகாதாரத்துக்கும் மனித மாண்புக்கும் உகந்தது அல்ல என்றும், ஏற்கெனவே இதுபோன்ற நிகழ்வுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது என்றும் தெரிவித்து, இதுபோன்ற நிகழ்வுகளுக்கு தடை விதிப்பதாக உத்தரவிட்டனர்.
மேலும், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர்.