ஹோலி: வட மாநிலங்களில் திரையிட்டு மூடப்படும் மசூதிகள்! என்ன நடக்கிறது?
ஹோலி பண்டிகை நாளை (மார்ச் 14) கொண்டாடப்படவுள்ள நிலையில், பிகார், உத்தரப் பிரதேச மாநிலங்களில் உள்ள மசூதிகள் தார்பாய்களால் மூடப்பட்டு வருகின்றன.
நாடு முழுவதும் மார்ச் 1 முதல் 31 வரை ரம்ஜான் மாதமாக இஸ்லாமிய மக்கள் கடைபிடித்து வருகின்றனர். ரம்ஜான் மாதத்தில் குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் அதிகளவிலான இஸ்லாமிய மக்கள் மசூதிகளுக்கு சென்று தொழுகை நடத்துவது வழக்கம்.
இந்த நிலையில், ஹிந்துக்கள் கொண்டாடும் ஹோலி பண்டிகையும் முஸ்லிம்கள் கொண்டாடும் ரமலானின் ஜும்மா நோன்பும் வருகிற மார்ச் 14 அன்று ஒரே நாளில் நிகழ்கிறது.
பிகார், உ.பி.யில் பதற்றம்
ஹோலி பண்டிகையின்போது ஹிந்துக்கள் வர்ணம் பூசுவதை விரும்பாதவர்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என்று உத்தரப் பிரதேச காவல்துறை அதிகாரியும், பிகார் எம்எல்ஏவும் பேசியிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் சம்பல் வட்ட அதிகாரி அனுஜ் சௌத்ரி. ”ஹோலி பண்டிகை என்பது வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே வரும்; ஆனால், வெள்ளிக்கிழமை தொழுகை என்பது வருடத்துக்கு 52 முறை வரும். ஹோலியின் வர்ணங்களை விரும்பாதவர்கள், அன்றைய நாளில் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே வருவதாயிருந்தால், பரந்த மனம் கொண்டவராய் இருக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
இவரின் கருத்துக்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்த நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் காவல்துறை அதிகாரிக்கு ஆதரவு தெரிவித்து பேசியுள்ளார்.
இதேபோல், பிகார் மாநிலம் பாஜக எம்எல்ஏ ஹரிபூஷன் தாக்கூர் பச்சௌல் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுடன் பேசும்போது, ”ரமலான் மாதத்தில் வெள்ளிக்கிழமை அன்று ஹோலி பண்டிகை வருவதால் இந்துக்களுடன் பிரச்னை ஏற்படுவதைத் தடுக்க முஸ்லீம்கள் அன்று வீட்டிலேயே இருக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இதனால் நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பல்வேறு எதிர்க்கட்சியினரும் பாஜக எம்எல்ஏவின் கருத்துக்கு எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர்.
மூடப்படும் மசூதிகள்
பிகார், உத்தரப் பிரதேச, மத்தியப் பிரதேச மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் உள்ள மசூதிகளை தார்பாய்கள் போன்றவற்றை கொண்டு திரையிட்டு மூடி வருகின்றனர்.
இதனிடையே, பிகார் மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் பெண் மேயர் அஞ்சும் அரா என்பவர் வெளியிட்ட அறிக்கையில், தொழுகை நேரத்தின்போது 2 மணிநேரம் ஹோலி கொண்டாட்டத்தை நிறுத்திவைக்க வேண்டும் என்றும் அந்த நேரங்களில் மசூதியைவிட்டு குறிப்பிட்ட தொலைவு தள்ளி நிற்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனால், பிகார் முழுவதும் இரு சமூத்தினரிடையே பதற்றம் நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதேபோல், உத்தரப் பிரதேசத்தின் சம்பல் பகுதியில் உள்ள ஜாமா மசூதி உள்பட10 மசூதிகளை திரையிட்டு மூட காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.
ஹோலி பண்டிகையன்று ஹிந்துக்கள் நடத்தும் 'சௌபாய்' எனப்படும் ஊர்வலம் சம்பல் பகுதியில் நடத்தப்படவுள்ளது.
அந்த ஊர்வலம் செல்லும் பகுதிகளில் உள்ள ஷாகி ஜமா மசூதி, லடானியா வாலி மசூதி, தானே வாலி மசூதி, ஏக ராத் மசூதி, குருத்வாரா சாலை மசூதி, கோல் மசூதி, கஜூர் வாலி மசூதி, அனார் வாலி மசூதி மற்றும் கோல் துக்கான் வாலி மசூதி ஆகிய பத்து மசூதிகள் திரையிட்டு மூடப்படுவதுடன் தொழுகையின் நேரத்தையும் ஊர்வலத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மத நிகழ்வுகளும் சுமூகமாக நடைபெற இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மதசார்பின்மையை சீர்குலைக்கும் நோக்கில் பாஜக அரசு செயல்படுவதாகவும், பல ஆண்டுகளாக மதங்களைக் கடந்து கொண்டாடப்பட்டு வரும் ஹோலி பண்டிகையை வைத்து பிரச்னையை ஏற்படுத்த முயல்வதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.