பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: இருவர் கைது!
தில்லியில் பிரிட்டன் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
பிரிட்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் தில்லியில் வசிக்கும் 24 வயதான கைலாஷ் என்ற நபருடன் சமூக வலைதளம் மூலம் இரு மாதங்களாக நட்பில் இருந்தார்.
கடந்த வாரம் இந்தியாவிற்கு வந்த பிரிட்டன் பெண் தில்லியிலுள்ள கைலாஷை நேரில் சந்திக்க இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு வந்தார்.
மஹிபால்பூர் நகரில் விமான நிலையம் அருகிலுள்ள விடுதியில் அறை எடுத்து தங்கிய அவர் மார்ச் 11 அன்று கைலாஷை அங்கு சந்திக்க வருமாறு கூறினார்.
இந்த நிலையில், அறைக்குச் சென்ற கைலாஷ் அந்தப் பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, கைலாஷ் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதையும் படிக்க | கா்நாடகத்தில் இஸ்ரேல் பெண் பாலியல் வன்கொடுமை விவகாரம்: மூன்று போ் கைது
பாதிக்கப்பட்ட பெண் விடுதியின் வரவேற்பறைக்கு உதவி கேட்கச் சென்றபோது அங்கிருந்த லிஃப்ட்டில் தூய்மைப் பணியாளர் ஒருவர் அவரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பிரிட்டன் பெண் அளித்த புகாரின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டனர். பாலியல் வன்கொடுமை, துன்புறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டன் தூதரகத்திற்கு இதுகுறித்து தகவல் தெரிவித்த தில்லி காவல்துறையினர் விடுதியின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடகத்தில் சில நாள்களுக்கு முன்பு இஸ்ரேலைச் சேர்ந்த பெண்ணை 3 பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நிலையில் மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நிகழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.