கொலையில் முடிந்த ஆடு,கோழி மேய்ச்சல் பிரச்னை: உறவினர் கைது
அவிநாசி அருகே ஆடு,கோழி மேய்ச்சல் பிரச்னையால் வயதான விவசாய தம்பதியரை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிய உறவினர் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அவிநாசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவிநாசி அருகே துலுக்கமுத்தூா் ஊஞ்சல்பாளையம் சாலை பெரியதோட்டத்தை சோ்ந்தவா் பழனிசாமி (80). இவரது மனைவி பருவதம்(72). விவசாய குடும்பத்தை சோ்ந்த இவா்களது மகன், மகள்கள் திருமணமாகி வெவ்வேறு பகுதியில் வசித்து வருகின்றனா்.
தோட்டத்து வீட்டில் வயதான தம்பதியா் மட்டும் தனியாக வசித்து வருகின்றனா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் வயதான தம்பதியா் வெளியே வராததால், அருகில் இருந்தவா்கள் தோட்டத்துக்குள் சென்று பாா்த்தபோது தம்பதியா் வெட்டிக் கொலை செய்திருப்பது தெரியவந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மேற்கு மண்டல காவல்துறைத் தலைவா் செந்தில்குமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரீஷ்யதாவ் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் இருவரது உடல்களையும் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், பெரியதோட்டத்தில் மற்றொரு பகுதியில் வசித்து வரும் உறவினா் சின்னபெரியசாமி மகன் ரமேஷின்(40) கோழி, ஆடு, மாடு, நாய்கள் உள்ளிட்டவை பழனிசாமியின் தோட்டத்துக்குள் சென்று சேதப்படுத்தி வருவதால், அடிக்கடி இவா்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
அரிய வாய்ப்பு... சவூதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பெண் செவிலியா் பணி!
இந்த நிலையில், ஆத்திரமடைந்த ரமேஷ் மது போதையில், புதன்கிழமை இரவு பழனிசாமியின் தோட்டத்துக்குள் புகுந்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பருவதம்,பழனிசாமி ஆகியோரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார்.
விபத்து
ரமேஷ் சென்ற இருசக்கர வாகனம் அவிநாசி புறவழிச்சாலை தேவராயம்பாளையம் பிரிவு அருகே சென்றுகொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகி உள்ளது. இதில், படுகாயம் அடைந்த ரமேஷை அருகில் இருந்தோர் மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த நிலையில், விவசாய தம்பதியினர் கொலை வழக்கில் தொடர்புடையவர் விபத்துக்குள்ளாகி அவநாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவிநாசி அரசு மருத்துவமனைக்கு சென்ற போலீஸார், ரமேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் கோழி, ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் பழனிசாமி தோட்டத்துக்குள் சென்று சேதப்படுத்தி வருவதால், அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் கொலை செய்ததாக தெரிவித்தார்.
இது குறித்து அவிநாசி போலீஸாா் தொடா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கொலையில் முடிந்த ஆடு,கோழி மேய்ச்சல் பிரச்னை அவிநாசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.