டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளையாட விரும்பும் கே.எல்.ராகுல்!
டாப் ஆர்டரில் களமிறங்கி நன்றாக விளையாடுவது தனக்கு இயல்பாக வருவதாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல்.ராகுல் வழக்கமாக 5-வது இடத்தில் களமிறங்கி விளையாடுபவர். ஆனால், அண்மையில் நிறைவடைந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கே.எல்.ராகுல் பின்வரிசையில் களமிறங்கி சிறப்பாக விளையாடினார். அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 5 இன்னிங்ஸ்களில் விளையாடி 174 ரன்கள் குவித்தார்.
இதையும் படிக்க: லக்னௌ அணியில் பேட்ஸ்மேனாக மட்டும் களமிறங்கவுள்ள ஆஸி. ஆல்ரவுண்டர்!
டாப் ஆர்டரில் விளையாட விருப்பம்
விரையில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், தான் ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாகவே கிரிக்கெட் விளையாடத் தொடங்கியதாகவும், டாப் ஆர்டரில் களமிறங்கி விளையாடுவது தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாகவே நான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினேன். எனது 11-வது வயதில் முதல் முறையாக தொழில் முறை போட்டியில் விளையாடத் தொடங்கியது முதல் இந்திய அணிக்காக ஆரம்ப காலக் கட்டங்களில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாகவே விளையாடினேன். அந்த இடத்தில் களமிறங்கி விளையாடி என்னால் நன்றாக ரன்கள் குவிக்க முடிகிறது. டாப் ஆர்டரில் நன்றாக விளையாடுவது எனக்கு இயல்பாக வருகிறது.
இதையும் படிக்க: டி20 தொடருக்காக நியூசிலாந்து சென்றடைந்த பாகிஸ்தான் அணி!
ஒரு அணியாக விளையாடும்போது, உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை உங்களால் எப்போதும் தேர்ந்தெடுக்க முடியாது. அணியின் தேவையை புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு விளையாடுவதற்கு தயாராக இருக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக அணியின் தேவையை உணர்ந்து அதற்கேற்றவாறு விளையாட கற்றுக் கொண்டேன். எந்த இடத்தில் களமிறக்கப்பட்டாலும் அணிக்காக நன்றாக விளையாட கற்றுக்கொண்டேன் என்றார்.