Immigration and Foreigners Bill: குடியேறிகளுக்குப் புதிய மசோதா கொண்டு வந்த பாஜக ...
இந்திய எல்லையில் பாகிஸ்தான் டிரோன்கள் வீசிய போதைப் பொருள்கள் பறிமுதல்!
ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள இந்திய எல்லையில் பாகிஸ்தானிலிருந்து டிரோன் மூலம் கடத்தப்பட்ட போதைப் பொருள் பொட்டலங்களை எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
பாகிஸ்தானிலிருந்து கட்டுப்படுத்தப்பட்ட டிரோன் ஒன்று நேற்று (மார்ச் 12) ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தின் கஜ்சிங்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பறப்பதாக அப்பகுதி மக்கள் சிலர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அந்த புகாரின் அடிப்படையில் எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையினர் இணைந்து அப்பகுதியிலுள்ள வயல்கள் முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில், இன்று (மார்ச் 13) காலை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் பாகிஸ்தானிலிருந்து கட்டுப்படுத்தப்பட்ட டிரோன் மூலம் இந்திய எல்லைக்குள் சுமார் 2.5 கி.மீ. தொலைவுக்கு ஊடூறுவி அப்பகுதியிலுள்ள கோதுமை வயலில் வீசப்பட்ட மர்ம பொட்டங்களைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிக்க: ஜம்மு - காஷ்மீரில் 76 பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாகத் தகவல்!
பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட பொட்டலத்தை சோதனை செய்ததில் அதில் 1.116 கிலோ அளவிலான ஹெராயின் எனும் போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த போதைப் பொருளின் மதிப்பானது இந்திய ரூ.5 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், இன்னும் சில ஹெராயின் பொட்டலங்கள் அங்குள்ள வயல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
எனவே, பாகிஸ்தானிலிருந்து டிரோன் மூலம் போதைப் பொருள் கடத்தப்படுவதைத் தடுக்க எல்லைப் பாதுகாப்புப் படை, குற்றப் புலானாய்வுத் துறை மற்றும் கஜ்சிங்பூர் காவல் துறையினர் ஆகியோர் அப்பகுதிகளில் தடுப்புகளை அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்தில், பஞ்சாப்பில் டிரோன் மூலம் பாகிஸ்தானிலிருந்து போதைப் பொருள்களை கடத்தி அதனை மாநிலம் முழுவதும் விநியோகித்து வந்த ஒரு சிறுவன் உள்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.