காவல் துறையினருடன் துப்பக்கிச் சண்டை... குற்றவாளி படுகாயம்! கூட்டாளியுடன் கைது!
ஜார்க்கண்ட் மாநிலத்தின் சுந்தர்கார் மாவட்டத்தில் காவல் துறையினருடனான துப்பாக்கிச் சூட்டில் முக்கிய குற்றவாளி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
சுந்தர்கார் மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டைச் சேர்ந்த வழக்கில் தேடப்பட்ட குற்றவாளிகளான பையீஸ் லக்குவா (வயது 32) மற்றும் அவருடைய கூட்டாளி அமித் தொப்னோ (30) ஆகியோர் பிஸ்ரா பகுதியில் வெள்ளை நிற காரில் சுற்றித் திரிவதாக ரவூர்கேலா காவல் துறையினருக்கு நேற்று (மார்ச் 12) அதிகாலை 3 மணியளவில் ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, அவர்களது வாகனத்தை கண்டுபிடித்த காவல் துறையினர், அவர்களை சரணடைய எச்சரித்துள்ளனர். ஆனால், அவர்கள் இருவரும் போலீஸாரை நோக்கி துப்பக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பிச் செல்ல முயற்சித்தனர்.
அப்போது, காவல் துறையினர் நடத்திய பதில் தாக்குதலில் லக்குவாவின் காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து அவர் கீழே விழுந்தார். ஆனால், அவரது கூட்டாளி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதையும் படிக்க: தீவிரவாதிகளின் கூட்டளிகள் 2 பேர் கைது! ஆயுதங்கள் பறிமுதல்!
இந்நிலையில், லக்குவாவை கைது செய்த காவல் துறையினர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், சில மணி நேரங்களில் தப்பிச் சென்ற அவரது கூட்டாளியான தொப்னோ கைது செய்யப்பட்டார்.
இத்துடன், அவர்களிடமிருந்து நாட்டு துப்பாக்கி ஒன்றும் அதன் குண்டுகளும் மற்றும் 2 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தற்போது கைது செய்யப்பட்டுள்ள லக்குவா என்ற நபர் மீது கொலை, பணப்பறிப்பு, கொலை முயற்சி, மற்றும் சட்டவிரோதமாக ஆயுதக் கடத்தல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்டதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.