`என்னைப் போன்ற ஒருவருக்கு இந்த விருது..!’ அமெரிக்காவில் 'சமையல் ஆஸ்கர்' விருதைப் பெற்ற மதுரை பையன்
'ஜேம்ஸ் பியர்ட் விருது!' - இது அமெரிக்க சமையல் உலகின் டாப் விருது. இந்த விருதை சமையல் உலகின் 'ஆஸ்கர் விருது' என்று கூட சொல்கிறார்கள்.
இந்த விருதை மதுரையைச் சேர்ந்த விஜய குமார் தட்டி சென்றுள்ளார். இவர் தற்போது நியூயார்க், கிரீன்விச்சில் உள்ள 'செம்மா' என்னும் தென்னிந்திய உணவகத்தில் தலைமை பொறுப்பு வகித்து வருகிறார்.
விஜய குமார் ஜேம்ஸ் பியர்ட் விருதை 'நியூயார்க்கின் சிறந்த செஃப்' என்ற பிரிவில் பெற்றுள்ளார். இந்த விருதைப் பெறும் முதல் இந்திய உணவகம் இது.
செம்மா 'Unapologetic Foods' நிறுவனத்தின் ஒரு பகுதி ஆகும். இந்த உணவகத்தில் தமிழ் உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன.

உண்மையான ஆடம்பரம் என்பது..!
இந்த உணவகத்திற்கு இன்னொரு சிறப்பும் உண்டு. நியூயார்க்கின் மிச்செலின் ஸ்டார் விருதில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக இடம்பிடித்து வரும் இந்திய உணவகமுமாய் இது.
இந்த விருது குறித்து விஜய குமார், "நான் சமைக்கத் தொடங்கியப் போது, தமிழ்நாட்டில் இருந்து வரும் என்னைப் போன்ற ஒருவர் இந்த விருதை பெற முடியும் என்று நினைக்கவில்லை. நான் வளரும் போது உண்ட உணவுகள் எல்லாம் அன்பு, ஆன்மா மற்றும் நெருப்பால் செய்யப்பட்டவை.
ஏழைகளுக்கான உணவு, பணக்காரர்களுக்கான உணவு என எதுவும் இல்லை. அது உண்மையாக இருந்தால், அது சக்தி வாய்ந்தது ஆகும். உண்மையான ஆடம்பரம் என்பது ஒரு மேஜையில் அனைவரும் இணைவது தான்" என்று பேசியுள்ளார்.
இந்த விருதை வாங்க செல்லும்போது விஜய குமார் தமிழர் பாரம்பரிய உடையான வேஷ்டியில் சென்றுள்ளார்.
இவர் இன்ஜினீயர் ஆக வேண்டும் என்று தான் இவருக்கு கனவு. ஆனால், இன்ஜினீயரிங் படிக்க போதுமான பணம் இல்லாததால், செஃப் ஆகியுள்ளார்.
நியூயார்க்கில் இருக்கும் இவரது செம்மா உணவகத்தில் நத்தை பிரட்டை, இரால் தொக்கு, நரி வால் தினை கிச்சடி பிரபலம். இங்கே உணவுகள் களிமண் பானைகளிலும், வாழை இலையிலும் பரிமாறப்படுகிறது. மேலும், அங்கு வருபவர்கள் கையில் தான் உண்ண வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மதுரை அரசம்பட்டியில் இருந்து சென்று அமெரிக்காவில் பெருமையான விருதை வாங்கிய 'செம்ம' விஜய குமாருக்கு வாழ்த்துகள்!