"மனுதர்மத்தை நிலைநாட்டத் துடிக்கும் வெறியர்களுக்கெதிராக தமிழகம் போராடும்" -ஆளுநர...
எழுத்தாளர் கொ.மா.கோதண்டம் மறைவு: முதல்வர் ஸ்டாலின், அரசியல் தலைவர்கள் இரங்கல்!
தமிழ் இலக்கிய உலகில் மூத்த எழுத்தாளரக அறியப்படும் கொ.மா.கோதண்டம் நேற்று (அக்டோபர் 4) இரவு 8 மணியளவில் உயிரிழந்துள்ளார். கவிதைகள், கட்டுரைகள், நாவல்கள், சிறுகதை பல எழுதியிருந்தாலும் இவரது சிறார் நாவலுக்காக அறியப்படுகிறார்.
குறிப்பாக நீலன் என்ற கற்பனைக் கதையை மையமாக வைத்து இவர் தொடர்ச்சியாக எழுதிய சிறுகதைகள் பிரபலமானவை. இவரது நாவல்கள் மற்றும் கவிதை தொகுப்புகளுக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார். சமூக செயற்பாட்டாளராக மலைவாழ் மக்களின் நலனுக்காக செயல்பட்டுள்ளார். பல மக்களை கொத்தடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க குரலெழுப்பியுள்ளார். இவரது நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த மு.க.ஸ்டாலின், "முதுபெரும் எழுத்தாளர் குறிஞ்சிச்செல்வர் திரு. கொ.மா. கோதண்டம் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
எளிய குடும்பத்தில் பிறந்து பஞ்சாலைத் தொழிலாளராக தமது வாழ்வைத் தொடங்கிய திரு. கோதண்டம் அவர்கள், அதே எளிய மக்களுக்கான எழுத்தின் மூலமாக இலக்கிய உலகில் தடம்பதித்த மிகச்சிறந்த படைப்பாளி. அதுமட்டுமின்றி சிறார்களுக்கான இலக்கியப் படைப்புகளிலும் பெரும் பங்களிப்பைச் செய்து, இன்றைய தலைமுறை எழுத்தாளர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர். பால சாகித்திய விருது, குடியரசுத் தலைவர் விருது, தமிழ்நாடு அரசின் இலக்கிய மாமணி விருது எனப் பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இவரது நூல்கள், கடந்த 2025 ஏப்ரல் 5 அன்று நமது திராவிட மாடல் அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன என்பதையும் நினைவுகூர்கிறேன்.

இத்தனை சிறப்புகள் வாய்ந்த எழுத்தாளர் திரு. கொ.மா. கோதண்டம் அவர்களின் மறைவு கலை, இலக்கிய உலகிற்கு ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், சக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்." எனக் கூறியுள்ளார்.
காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, "மூத்த எழுத்தாளர் திரு. கோ.மா. கோதண்டம் அவர்களின் மறைவு செய்தி கேட்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன்.
முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி, மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் ஆகியோரால் பாராட்டப்பட்ட திரு. கோ.மா. கோதண்டம் அவர்கள், எளிய குடும்பத்தில் பிறந்து, சுயமுயற்சியால் வளர்ந்து தமிழ் இலக்கிய உலகிற்குச் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்.
அவரது படைப்புகள் எளிய மக்களுக்கானதாக, அவர்கள் வாழும் களத்தின் உண்மையைப் பிரதிபலிப்பதாக அமைந்திருந்தன. இவர் சிறுவர்களுக்கான இலக்கியப் படைப்புகளிலும் பெரும் பங்காற்றியதுடன், இன்றைய தலைமுறைக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்.
சாகித்ய அகாடமி விருது, குடியரசுத் தலைவர் விருது, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது எனப் பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இவரது படைப்பிலக்கியப் பணிகள், தமிழ் இலக்கிய உலகில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளன. அன்னாரது இழப்பு இலக்கிய உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
எழுத்தாளர் திரு. கோ.மா. கோதண்டம் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், சக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்." என இரங்கல் தெரிவித்துள்ளார்.