புதின், ஜெலன்ஸ்கி இல்லாமல் நடந்த ரஷ்யா, உக்ரைன் பேச்சுவார்த்தை.. இனி என்ன நடக்கு...
ஒடிசாவில் மின்னல் பாய்ந்து ஒரே நாளில் 3 குழந்தைகள் உள்பட 10 பேர் பலி!
ஒடிசாவின் பல்வேறு மாவட்டங்களில் மின்னல் பாய்ந்து 3 குழந்தைகள் உள்பட 10 பேர் பலியாகியுள்ளனர்.
ஒடிசாவின் வடமேற்கு மாவட்டங்களில் நார்வெஸ்டர் என்றழைக்கப்படும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கோடைக்கால மழை பெய்து வருவதாகக் கூறப்படுகிறது.
கோராபுட் மாவட்டத்திலுள்ள பரிடிகுடா கிராமத்திலுள்ள ஒரு குடிசையின் மீது நேற்று (மே 16) மதியம் மின்னல் பாய்ந்துள்ளது. இதில், மழைக்காக அந்தக் குடிசையின் கீழ் ஒதுங்கியிருந்த மூதாட்டி, அவரது பேத்தி உள்பட 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும், அந்த மூதாட்டியின் கணவர் உள்பட 5 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கோராபுட்டின் செமிலிகுடா பகுதியில் ஆற்றில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தாசா ஜனி (வயது 32) என்ற நபரும் மின்னல் பாய்ந்து சம்பவயிடத்திலேயே பலியாகியுள்ளார். இந்தச் சம்பவத்தில் அவரது உறவினர்களான சைதியாராம் மஜ்ஹி மற்றும் லலிதா மஜ்ஹி படுகாயமடைந்தனர்.
உடனடியாக அவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே லலிதா மஜ்ஹி பலியான நிலையில் சைத்தியாராம் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
ஜாஜ்பூர் மாவட்டத்தின், புடுசாஹி கிராமத்தில் வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த 2 சிறுவர்கள் நேற்று (மே 16) மாலை மின்னல் பாய்ந்ததில் பலியாகியுள்ளனர்.
இத்துடன், கஜபதி மாவட்டத்தில் தமயந்தி மண்டல் என்ற பெண் மின்னல் பாய்ந்து பலியாகியுள்ளார். இந்தச் சம்பவத்தில் மேலும் 4 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கஞ்சம் மாவட்டத்தில் 2 பேரும், தேன்கனாலில் ஒருவர் மின்னல் பாய்ந்ததில் பலியாகியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2022 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் மின்னல் பாய்ந்ததில் ஒடிசாவில் சுமார் 1,075 பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: நிதி ஆயோக் கூட்டத்தில் மமதா பங்கேற்பாரா?