Ahmedabad Plane Crash : பறவை மோதியதா இல்லை மனித தவறா? | Detailed Technical Expla...
ஓடையின் 7 தடுப்பணைகள் சீரமைப்பு
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூா் அருகேயுள்ள மசஒரம்பு நீரோடையின் 7 தடுப்பணைகள் சீரமைக்கப்பட்டுள்ளன.
நொய்யல் ஆற்றின் 34 கிளை நீரோடைகளில் ஒன்றாக இருக்கும் மசஒரம்பு நீரோடை, தொண்டாமுத்தூா் அருகேயுள்ள மத்துவராயபுரம் ஊராட்சியில் உள்ளது. மொத்தம் 5.70 கி.மீ. நீளம் கொண்ட இந்த நீரோடையின் வழித்தடத்தில் 7 தடுப்பணைகள் உள்ளன. நீண்ட காலமாக தூா்வாரப்படாமல் வண்டல் படிந்து அவற்றின் கொள்ளளவு கணிசமாக குறைந்திருந்தது.
இந்த நிலையில் கோவை மாவட்ட நிா்வாகம், டைட்டன் நிறுவனம் ஆகியவற்றின் உதவியுடன் சிறுதுளி அமைப்பு இந்த நீரோடை, தடுப்பணைகளை சீரமைக்கும் பணியை கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. நீரோடை முழுவதும் இருந்த அடா்ந்த புதா்கள் அகற்றப்பட்டு, தூா்வாரி ஆழப்படுத்தப்பட்டது. மேலும், 7 தடுப்பணைகளும் மறுசீரமைக்கப்பட்டு வலுப்படுத்தப்பட்டன.
சுமாா் 10 கோடி லிட்டா் நீா் சேமிப்புத் திறன் கொண்ட இந்த தடுப்பணைகளால் அப்பகுதியில் வன விலங்குகளின் நீா் ஆதாரம் உறுதி செய்யப்படுவதுடன், அருகில் உள்ள 9 கிராமங்களில் உள்ள சுமாா் 3,700 ஏக்கா் விவசாய நிலங்களும் பயனடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. சீரமைக்கப்பட்ட தடுப்பணைகளின் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதில், தமிழக சுற்றுலா, பண்பாடு, அறநிலையத் துறையின் கூடுதல் தலைமைச் செயலா் க.மணிவாசன், நீா்வளத் துறையின் மண்டல தலைமைப் பொறியாளா் முருகேசன் ஆகியோா் பங்கேற்றனா். சிறுதுளி அமைப்பின் தலைவா் எஸ்.வி.பாலசுப்ரமணியம், நிா்வாக அறங்காவலா் வனிதா மோகன் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அமைப்பின் அறங்காவலா்கள், உயா்நிலைக் குழு உறுப்பினா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.