கட்டாயத் திருமண முயற்சி; கல்லூரி மாணவி கடத்தல்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கைது
கரூர் அருகே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவி (வயது -19). இவர் கல்லூரிக்கு கரூர் ஈசநத்தம் சாலையில் உள்ள ராயனூர் பகுதியில் உள்ள பொன்நகர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி கல்லூரி நோக்கி, சக மாணவிகளுடன் சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது, ஆம்னி காரில் வந்த இளைஞர்கள் சிலர் கல்லூரி மாணவியை வலுக்கட்டாயமாக அந்த வாகனத்தில் ஏற்றிக் கடத்திச் சென்னர். இச்சம்பவம் தொடர்பாக தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் மாணவியின் சகோதரி அளித்த புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து, பல்வேறு இடங்களில் விசாரணையை தீவிரபடுத்திய போலீஸார், கல்லூரி மாணவியை காதலித்து வந்த ஈசந்த்தம் அருகே கட்டட தொழிலாளி நந்தகோபால் என்ற இளைஞர் மீது சந்தேகம் ஏற்பட்டு, அவர் மாணவியைக் கடத்தியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை மேற்கொண்டனர்.

இந்நிலையில், செல்போன் சிக்னல்களை கொண்டு பின் தொடர்ந்த போலீஸார், திண்டுக்கல் அருகே உள்ள குஜிலியம்பாறை அருகே மாணவியை மீட்டு, நந்தகோபாலை கைது செய்ததோடு, கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். அதோடு, மாணவியை கடத்த உடந்தையாக இருந்தாக நந்தகோபாலின் தாய் கலா, பாட்டி பொன்னம்மாள் , உறவினர்கள் சரவணன், பழனிசாமி உள்ளிட்ட 4 பேர்களையும் கைது செய்தனர்.
போலீஸாரின் தீவிர விசாரணையில், ஒரே சமூகத்தைச் சேர்ந்த உறவினர்களான கல்லூரி மாணவி மற்றும் நந்தகோபால் ஆகிய இருவரும் காதலித்து வந்ததாகவும், இரு வீட்டார் சம்மதம் பெற முயற்சி செய்தபோது, கல்லூரி மாணவிக்கு தந்தை இல்லாததால் அக்காவின் கணவர், நந்தகோபாலுக்கு திருமணம் செய்து வைக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில்தான், நந்தகோபாலின் குடும்பத்தினர் கல்லூரிக்கு வந்த மாணவியை கடத்திச் சென்று நந்தகோபாலுக்கு திருமணம் செய்து வைக்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையில், அவர்களிடம் இருந்து கல்லூரி மாணவியை மீட்ட போலீஸார், கல்லூரி மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்துவைக்கும் ஏற்பாட்டில் இருந்த நந்தகோபாலின் குடும்பத்தினரை கடத்தல் வழக்கில் கைது செய்துள்ளனர். கல்லூரி மாணவியை கடத்திச் சென்ற வழக்கில் ஒரு குடும்பமே கைதாகியுள்ள சம்பவம், கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
