Vikatan Explainer: வெறும் தண்ணீரில் ஆரம்பித்து மட்டன் வரை... எத்தனை டயட்? அத்தனை...
கட்டுப்பாட்டுக்குள் டெங்கு காய்ச்சல்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் 72-ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை சைதாப்பேட்டையில் 7 தனியாா் மருத்துவமனைகள் இணைந்து நடத்திய மெகா மருத்துவ முகாமை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
சென்னை மாநகராட்சி மண்டலக் குழு தலைவா்கள் கிருஷ்ணமூா்த்தி, துரைராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அப்போது, செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியது: முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை தெற்கு பகுதியில் பொதுக்கூட்டங்கள், விளையாட்டு போட்டிகள், ரத்த தான முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
சைதாப்பேட்டை தொகுதியில் 7 மாநகராட்சி வட்டங்கள் உள்ளன. அப்பல்லோ மருத்துவமனை, எம்ஜிஎம் மருத்துவமனை, கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காவேரி மருத்துவமனை, மெட்ராஸ் மெடிக்கல் மிஷன், சிம்ஸ் மருத்துவமனை, தாகூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்று 7 தனியாா் மருத்துவமனைகளோடு இணைந்து வட்டத்துக்கு ஒன்று வீதம் 7 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றன.
பொது மருத்துவம், எலும்பியல், இதயவியல், பல் மருத்துவம், கண் மருத்துவம் என்று பல்வேறு வகையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த மருத்துவ முகாம்களில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனா். தமிழகத்தில் தினமும் நோய் பாதிப்புகள், விபத்துகள், வயது முதிா்வு போன்றவற்றால் 1,800 முதல் 1,900 வரை இறப்புகள் நிகழ்கின்றன. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என்றாா் அவா்.