செய்திகள் :

கலவர பூமியாகும் லாஸ் ஏஞ்சலீஸ்! அமைதி திரும்புமா?

post image

உலகப் புகழ்பெற்ற அமெரிக்க நகரான லாஸ் ஏஞ்சலீஸுக்கு இப்படியொரு சோதனை வரும் என இந்த மக்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. இந்த நகரின் பெயர் இப்படியொரு காரணத்துக்காக உச்சரிக்கப்பட வேண்டும் என்று எப்போதுமே  விரும்பக் கூடியவர்கள் அல்லர் இவர்கள்.

கலவரங்களையும் வன்முறைகளையும் கட்டுப்படுத்தும் நோக்கில் நகரின் சில பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. போராட்டம் தொடர்பாக, ஞாயிற்றுக்கிழமை 27 பேரும் திங்கள்கிழமை 40 பேரும் செவ்வாய்க்கிழமை 114 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது நடவடிக்கைகள் தொடருகின்றன.

லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் பாதுகாப்புப் படை வீரர்கள் 2,100 பேர் நிறுத்தப்பட்டுள்ளனர். கடற்கரைப் பகுதிகளில் சுமார் 700 கடற்படை வீரர்கள் ஆயத்தமாக நிறுத்தப்பட்டுள்ளனர். (லாஸ் ஏஞ்சலீஸில் புதன்கிழமை விடிந்த பிறகு – இந்திய நேரப்படி மாலையில் தொடங்கி) எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடைபெறலாம் என்ற நிலைமை தொடருகிறது.

நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மறியலில் ஈடுபட்ட நிலையில் கண்ணீர்ப் புகைவீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டு இந்தப் பகுதிகளே வானுயர புகை மண்டலமாகிவிட்டிருக்கிறது.

சட்டப்படியான தகுதியில்லாமல் குடியேறியிருப்பவர்களைத் தேடி (அமெரிக்காவை விட்டு வெளியேற்றுவதற்காக) இந்த நகரிலுள்ள வணிகத் தலங்களில் அமெரிக்க குடியேற்றத் துறையினர் திடீர் சோதனைகளை நடத்துவதில்தான் இந்தப் பிரச்சினை தொடங்கியது. இவ்விஷயத்தில், அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் ஆளுநர் கவின் நியூசோமும் கடுமையாக மோதிக்கொள்கின்றனர். டொனால்ட் நிலைப்பாட்டில் மாகாணத்திலுள்ள பலருக்கும் உடன்பாடு இல்லாத நிலையில், எதிரெதிராகக் கருத்துத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் பல வேமோ ரோபோடாக்சிகள் தீப்பற்றி எரிகின்றன, அமெரிக்க ஒன்றிய அரசின் தடுப்புக் காவல் மையத்தில் எதிர்ப்புச் சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன.  ரப்பர் தோட்டாக்கள் சுடப்படுகின்றன. மக்கள் கூட்டத்தின் மீது நோக்கி ஒளி - ஒலி கையெறி குண்டுகள் விழும் சப்தங்கள் விடியோக்களில் கேட்கின்றன.

கடந்த ஜனவரி மாதத்தில் நேரிட்ட பயங்கரமான காட்டுத் தீயின் பாதிப்பிலிருந்து இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக நகரம் மீண்டுகொண்டிருக்கும் நிலையில் - மேலும் இந்தாண்டு உலகக் கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியையும் 2028 ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகளையும் நடத்தவிருக்கும் நிலையில் இப்படியொரு வேண்டாத சிக்கல்.

வீதிகளை அழகுபடுத்துமாறும், மரங்களை நடுமாறும் சுவரோவியங்களைத் தீட்டுமாறும் லாஸ் ஏஞ்சலீஸின் தோற்றத்தை முற்றிலுமாகப் புதுப்பித்துக் காட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு மக்களுக்கு ஒருபுறம் மேயர் கரேன் பாஸ் அழைப்பு விடுத்திருக்க மாறாகத் தற்போது நகரின் பகுதிகள்  பற்றியெரிகின்றன.

பெருமை மிக்க, கனவுகளின் நகரமான லாஸ் ஏஞ்சலீஸ், தற்போது மிகவும் மோசமான – அமைதியற்ற கலவர பூமியென்ற - சித்திரத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.

நாற்பது லட்சம் மக்கள் வசிக்கும் நகரின் ஒரு பகுதியில் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடைபெறுகின்றன. கலகத்தைக் கட்டுக்குள் கொண்டுவர ஐந்தாயிரம் ராணுவத்தினர் களமிறக்கப்பட்டிருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். ஆனால், கூடவே நகரம் நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருப்பதாக டிரம்ப் கூறியிருப்பதை மேயர் கரேன் பாஸ் மறுத்திருக்கிறார்.

Protesters confront police
காவல்துறையினருடன் மோதும் போராட்டக்காரர்கள்...

லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தை சட்டவிரோதமாகக் குடியேறியுள்ள வெளிநாட்டினரும் குற்றவாளிகளும் ஆக்கிரமித்துள்ளனர். வன்முறை, கிளர்ச்சிக் கும்பல்கள் செல்வாக்குப் பெற்றிருக்கின்றன என்றெல்லாம் அதிபர் டிரம்ப் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், உள்ளபடியே அப்படியெல்லாம் இருப்பதாக யார் கண்டார்கள் எனத் தெரியவில்லை. ஒரு மேயராக நான் அப்படி எதையும் பார்த்ததில்லை என்றும் எதிர்வினையாற்றியிருக்கிறார் மேயர் பாஸ்.

கடந்த வெள்ளிக்கிழமை தான் இந்தப் போராட்டங்கள் தொடங்கின. குடியேற்றத் துறை அலுவலர்களால் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி நகரிலுள்ள அமெரிக்க ஒன்றிய அரசின் தடுப்புக் காவல் மையத்திற்கு வெளியே மக்கள் போராட்டங்களைத் தொடங்கினர்.

கைது செய்து அல்லது தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் யாரும் எவ்வித குற்றச் செயல்களிலும் சம்பந்தப்பட்டவர்கள் அல்லர். அவர்களுக்கு உரிய சட்ட செயல்முறை உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்றும் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.

நியூயார்க் நகரைப் போலவே லாஸ் ஏஞ்சலீஸ் நகரையும் ஒரு பன்னாட்டு நகரெனலாம். இங்கே குடியேறிய பலரும் இதையே தங்கள் நிலமெனக் கருதுகின்றனர். வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தால், ஸ்பெயின் மற்றும் மெக்சிகோ ஆகியவற்றின் ஆட்சியின் கீழேயெல்லாம் இந்த நகரம் இருந்திருக்கிறது.

லாஸ் ஏஞ்சலீஸ் ஒருங்கிணைந்த பள்ளி மாவட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசும் மாணவர்கள் இருக்கின்றனர்! நகரில் வசிக்கும் மக்களில் பாதிப் பேர் லத்தீன் அமெரிக்கர்கள்; மூன்றில் ஒரு பகுதியினரோ அமெரிக்காவிற்கு வெளியே பிறந்தவர்கள்.

போராட்டங்களை அடக்க ராணுவத்தினரை இறக்குவதன் மூலம் தேவையற்ற ஒரு குழப்பத்தை – பதற்றத்தை டிரம்ப் நிர்வாகம் உருவாக்கியுள்ளதாகக் குற்றம் சாட்டும் மேயர் பாஸ், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைப் பொருத்தவரை இதுவொரு விஷயமே அல்ல என்றும் குறிப்பிடுகிறார்.

நகரில் மேலும் டிரம்ப் நிர்வாகம் சோதனைகளை நடத்தினால் போராட்டங்கள் தொடரும் என்று எச்சரிக்கும் போராட்டக்காரர்களில் ஒருவரான ஆடம் லெர்மன்,  அவர்கள் நெருப்புடன் விளையாடுகிறார்கள் என்பது அனைவருக்குமே தெரியும் என்று கூறுகிறார்.

பன்னாட்டு விளையாட்டு நிகழ்ச்சிகளுக்காக உலகை வரவேற்க லாஸ் ஏஞ்சலீஸ் நகரம் தயாராகிக் கொண்டிருக்கும்போது,  இது தேவையில்லாத வேலை. இப்படியொரு நகர் கொந்தளித்துக் கிடந்தால் அடுத்தடுத்த விளையாட்டுக்காகவும் சுற்றுலாவாகாவும் உலகில் எங்கேயிருந்து, யார் இங்கே வர விரும்புவார்கள் என்றும் இந்த மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்

திடீரென நகரில் சட்ட விரோதமாகக் குடியேறியவர்களைக் கண்டுபிடிக்கிறோம் என்ற பெயரில் ஒன்றிய அமெரிக்க அரசு நடத்தும் சோதனைகளால் மேயர்தான் பெரிய இக்கட்டில் சிக்கிக்கொண்டிருக்கிறார்; மக்கள் போராட்டங்களுக்கு எதிராகக் கருத்துத் தெரிவிப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலையில் மக்கள் அமைதியாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துவருகிறார்.

சமூக ஊடகங்களில் மேயர் பாஸைத் திறமையற்றவர் என்று குறிப்பிட்டு, சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்தவர்களால் லாஸ் ஏஞ்சலீஸ் நகரம் "ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது" என்று டிரம்ப் கூறியதன் மூலம் உருவாகியுள்ள தோற்றத்தை மாற்ற இவரும் நகரமும் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும்.

லாஸ் ஏஞ்சலீஸ் பரந்து விரிந்தது - சுமார் 470 சதுர மைல்கள் (750 சதுர கிலோ மீட்டர்கள்) – இந்தப் போராட்டங்கள் பெரும்பாலும் நகரின் பிரதான பகுதிகளில்தான் நடைபெறுகின்றன.

"இப்போது மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், எங்கள் நகரம் அமைதியாக இருக்க வேண்டும் என்பதுதான்" என்று குறிப்பிடும் பாஸ், "டிரம்ப்  நிர்வாகத்தால் உருவாக்கப்படும் குழப்பத்திற்குள் மக்கள் சிக்கிக்கொண்டுவிடக் கூடாது" என்கிறார்.

ஒருபுறம் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்க இன்னொரு புறம் தொழிலாளர்கள் வீதிகளிலும் நடைபாதைகளிலும் குவியும் குப்பைகளையும் உடைந்த கண்ணாடிகளை அகற்றிக் கொண்டிருக்கின்றனர். மேலும் கட்டடங்களில் எழுதப்பட்டுள்ள கண்டன முழக்கங்களை அழித்துக் கொண்டிருக்கின்றனர்.

tear gas
கண்ணீர்ப் புகை...

அதிபர் டிரம்ப்பும் லாஸ் ஏஞ்சலீஸ் இருக்கும் கலிபோர்னியா மாகாண தலைவர்களும் இணையத்திலும் வெளியிலும் தொடர்ந்து மோதிக் கொள்வதுடன் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றனர்.

வெள்ளை மாளிகையில் பேசிய அதிபர் டிரம்ப், கலிபோர்னியா மாகாணத்  தலைவர்களை "எதுவும் செய்ய அஞ்சுகிறார்கள்" என்று விமர்சித்தார். மேலும் இந்தப் போராட்டங்களைக் கையாண்ட விதத்திற்காக ஆளுநர் நியூசோம் கைது செய்யப்பட்டால் ஆதரவளிப்பதாகவும் குறிப்பாகத் தெரிவித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன் இங்கே பற்றியெரிந்த காட்டுத் தீயைப் பெரும் போராட்டத்துக்குப் பின் அணைத்துவிட்டார்கள். இப்போது போராட்டங்களே  பற்றியெரியும் நிலையில், எவ்வாறு கட்டுப்படுத்தி, எப்போது, எப்படி அமைதி திரும்பப் போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாகிக் கொண்டிருக்கிறது.

[செய்தி நிறுவனங்களின் தகவல்களுடன்]

பெருந்துயரமாக மாறிய கொண்டாட்டம்!

பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வெற்றிக் கொண்டாட்டத்தின்போது 5 பெண்கள் உள்பட 11 போ் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில், பெங்களூரில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற... மேலும் பார்க்க

நா காக்க...காவாக்கால்...?

கன்னடமொழிக்கும் நடிகா் கமல்ஹாசனுக்கும் மிகவும் நெருங்கிய தொடா்பு உண்டு. இதை நடிகா் கமல்ஹாசனும் பலமுறை கூறியிருக்கிறாா். கன்னட மக்களுக்கும் கமல்மீது அளவில்லா அன்பு உண்டு என்பதை பலமுறை வெளிப்படுத்தி இர... மேலும் பார்க்க

கலைஞர் கருணாநிதி பிறந்த நாளில் பொன்விழா காணும் இரு சமூகநலத் திட்டங்கள்!

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் முதல்வர் மு. கருணாநிதியால், அனேகமாக நாட்டிலேயே முதன்முதலாக, தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இரு சமூகநலத் திட்டங்கள் இப்போதும் செயற்படுத்தப்பட்டுப் பொன்விழா காண்கின்றன.சரி... மேலும் பார்க்க

ஜப்பானைத் தெறிக்க விடும் அரிசிப் பஞ்சம்!

என்னடா, மதுரைக்கு வந்த சோதனை? என்கிற திரைப்பட வசனத்தைப் போல வல்லரசுகளையே வைத்து செய்யக் கூடிய ஜப்பான் நாட்டுக்கும் ஒரு சோதனை வந்திருக்கிறது – அரிசியால். அரிசிப் பஞ்சத்தால் ஆட்சி மாற்றங்களைக் கண்ட ஊர் ... மேலும் பார்க்க

சிகரெட் விற்பனைக்கு தனி உரிமம்: புகையிலை புழக்கத்தை குறைக்க அரசு முன்முயற்சி

சென்னை: தமிழகத்தில் பொது இடங்களிலும், கல்வி வளாகங்கள் அருகிலும் புகையிலைப் பொருள்கள் பயன்பாட்டை குறைக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க மக்கள் நல்வாழ்வுத் துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, பீ... மேலும் பார்க்க

30 ஆண்டுகளுக்கு முன் 30 உயிர்கள்! சாலையோர சவக் கிணறுகளும் அரசு சுற்றறிக்கைகளும்...

சாத்தான்குளம் அருகே சாலையோர கிணற்றில் வேன் விழுந்து 5 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தடுப்பு ஏற்பாடுகள் தொடர்பான சுற்றறிக்கையொன்றைத் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலர் அனுப்பியுள்ளார்.தூத்துக்குடி மாவட்டம் ... மேலும் பார்க்க