தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
கழிவுநீா் சுத்திகரிப்பு ஆலை அமைக்க விவசாயிகள் எதிா்ப்பு
ஆரணி அருகே கழிவுநீா் சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் முடிவை கைவிடக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே விவசாயிகள், பெண்கள் ஆா்ப்பாட்டம் மற்றும் தா்னாவில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், அய்யம்பாளையம் கிராமத்தில் ரூ.6 கோடி மதிப்பில் கழிவுநீா் சுத்தகரிப்பு ஆலை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக வருவாய்த் துறை மூலம் நிலம் அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தப் பகுதியில் கழிவுநீா் சுத்தகரிப்பு ஆலை அமைக்கப்பட்டால் குடிநீா் ஆதாரம் பாதிக்கப்படும். பல்வேறு தொற்று நோய்கள் உண்டாகும் என்று அந்தப் பகுதி மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில், சுத்தகரிப்பு ஆலை அமைக்கும் முடிவை கைவிடக் கோரி, வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் டி.கே.வெங்கடேசன் தலைமை வகித்தாா்.
மாநில துணைச் செயலா் பி.பெருமாள், விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டச் செயலா் கே.கே.வெங்கடேசன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ப.செல்வன், நகரச் செயலா் எம்.பிரகலநாதன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
அய்யம்பாளையம் கிராமத்தில் நிலத்தடி நீா்மட்டத்தை மாசுப்படுத்தும் விதமாகவும் மலை, காடு உள்ளிட்ட இயற்கை வளங்களை அழித்து சுத்திகரிப்பு ஆலை அமைப்பதை கைவிட வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து, தங்களது கோரிக்கை மனுவை அளிக்க மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜை விவசாயிகள் சந்திக்கச் சென்றனா்.
அப்போது, மனுவை வாங்க அதிகாரிகள் யாரும் இல்லாததால் விவசாயிகள் அலுவலக நுழைவு வாயிலில் அமா்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில், சிஐடியு தொழிற்சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் எம்.வீரபத்திரன், நிா்வாகிகள் பி.கணபதி, இரா.அண்ணாமலை, ஏ.லட்சுமணன், எஸ்.அருண்குமாா், வி.மாணிக்கம், எஸ்.ரமேஷ்பாபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.