KMH: 'ஹார்ட் வைஸ் க்விஸ் 2025' நிகழ்ச்சி; குழந்தைகளுக்கு இதய ஆரோக்கிய விழிப்புணர...
கழுகார்: `பாலம் தந்த தலைவருக்குப் பாராட்டு விழா' கேட்ட மாஜி - கடுப்பில் சூரியக் கட்சி சீனியர்கள்
வழக்குகளால் பதவியை இழந்த மாஜியார், தொடர்ந்து விதவிதமாக நிகழ்ச்சிகளை நடத்தி ஸ்கோர் செய்கிறாராம். சமீபத்தில், தன் சொந்த மாவட்டத்தில் பெரும் விழாவை நடத்திய அவர், அடுத்ததாக மான்செஸ்டர் மாவட்டத்தில் இளைஞரணி நிகழ்ச்சியை நடத்துவதில் பிஸியாக இருக்கிறாராம்.
‘இது எங்களுக்கான நிகழ்ச்சி. நிர்வாகிகளை வைத்தே நடத்திக்கொள்கிறோம்...’ என்று இளம் தரப்பிடமிருந்து பதில் வந்தாலும், ‘என் பங்குக்கு நானும் ஏதாவது செய்கிறேனே...’ என்று வான்ட்டடாக வாலன்டியர் செய்கிறாராம் அந்த மாஜி. இந்த நிலையில், புதிய பாலம் திறப்பு விழா சர்ச்சையாகியிருக்கும் நேரத்தில், அந்தப் பாலம் தொடர்புடைய சமூகப் புள்ளிகளிடம், ‘பாலம் தந்த தலைவருக்குப் பாராட்டு விழா நடத்துவதாக அறிவிங்க... மிச்சத்தை நான் பார்த்துகிறேன்...’ என்று டீல் பேசினாராம் மாஜி. ஆனால், ‘என்னது பாராட்டு விழாவா... ஆளை விடுங்க...’ என்று அவர்கள் தெறித்து ஓடியிருக்கிறார்கள். ‘இவருபாட்டுக்கு நிகழ்ச்சியா நடத்தி, நாம சும்மா இருக்கிறோம் என்று பெயர் வாங்கிக்கொடுக்கிறாரே...’ என்று கடுப்பாகிறார்களாம் சூரியக் கட்சியின் இதர சீனியர்கள்!
டெல்டா மாவட்டம் ஒன்றில், புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் பேருந்து நிலையத்தின் திறப்பு விழா சமீபத்தில் நடந்தது. அதற்காக அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில், ஆளுங்கட்சியின் மாவட்டச் செயலாளரின் பெயர் இடம்பெறவில்லையாம். ‘மாவட்ட ஜூனியர் அமைச்சரின் உள்ளடியால்தான் இது நடந்திருக்கிறது...’ என்று ஏகத்துக்கும் கொதித்துவிட்டார்களாம் மா.செ-வின் ஆதரவாளர்கள்.
அதனால் பதறிய அமைச்சர் தரப்பு, புதிதாக மா.செ-வின் பெயருடன் சொற்ப அளவில் தனியே அழைப்பிதழ் அச்சடித்துக் கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும், திறப்பு விழாவில் கலந்துகொள்ளாமல் மா.செ புறக்கணித்துவிட்டாராம். ‘இந்த விஷயத்தில் அவர்கள் இருவருக்குமிடையே சமாதானம் செய்துவைக்க, மண்டலப் பொறுப்பாளரான அமைச்சர் முயன்றும் புகைச்சல் அடங்கவில்லை. இப்போது பனிப்போர் உச்சமாகி வீதிக்கு வந்து, முதன்மையானவர் காது வரைக்கும் பிரசனை சென்றுவிட்டது’ என்கிறார்கள் உடன்பிறப்புகள்!
மலர்க் கட்சியின் தலைமைப் பொறுப்புக்குப் புதிதாக வந்திருப்பவர், பழைய தலைமையின் ஆதரவாளர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்டிவருகிறார். அந்த வகையில், அவார்டு மாவட்டத்தில் மகாபாரத முக்கியப் பாத்திரத்தின் பெயரைக்கொண்ட நிர்வாகி, முற்றிலும் ஓரங்கட்டுப்பட்டுவருகிறாராம்.
‘அந்த மாவட்டத்துக்குத் தலைவர் வருகிற தகவல்கூடச் சொல்லப்படுவதில்லை. மாவட்டப் பொறுப்புகளுக்கு, அவர் கொடுத்த சிபாரிசுப் பட்டியலையும் ஓரமாகப் போட்டுவிட்டார்கள். அவரின் ஆதரவாளர்கள் ஒருவருக்குக்கூட போஸ்ட்டிங் போடவில்லை. இது குறித்து மனம்விட்டுப் பேச நேரம் கேட்டும், தலைமை நேரம் ஒதுக்கவில்லை. இதில் அதிருப்தியான மாவட்ட நிர்வாகி, கட்சியிலிருந்து விலக முடிவுசெய்து, தலைமைக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பவிருக்கிறார்’ என்கிறார்கள் மலர்க் கட்சியின் சீனியர்கள்!
உச்ச நீதிமன்றத்தில் தொடர்ச்சியாகத் தமிழக அரசுக்குக் குட்டு விழுந்துவரும் இந்தச் சூழலில், டி.ஜி.பி நியமனம் தொடர்பாகவும் நீதிமன்றத்தில் குட்டு வாங்க ஆட்சி மேலிடம் தயாராக இல்லையாம். ‘சட்டரீதியான நடைமுறைகளை விரைந்து செய்யுங்கள்...’ என்று முதன்மையானவர் அலுவலகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், ‘யூ.பி.எஸ்.சி கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழகத்தின் சீனியர் அதிகாரிகள், இறுதி முடிவுக்கான அறிக்கையில் கையெழுத்து போடவில்லை.
அவர்கள் மீண்டும் டெல்லிக்குச் சென்று கையெழுத்து போட்டால்தான், அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க முடியும்...’ என்று விவகாரத்தை இழுக்கப் பார்க்கிறார்களாம் சில அதிகாரிகள். ‘அந்த அதிகாரிகள் குழப்பிவிடுவதை இனியும் ஆட்சி மேலிடம் கேட்டுக்கொண்டிருக்கக் கூடாது... இப்படியே போனால் குட்டு விழுவதைத் தவிர்க்க முடியாது’ என்கிறார்கள் கோட்டையிலுள்ள சீனியர் அதிகாரிகள்!
அல்வா மாவட்ட காவல்துறைமீதான விமர்சனத்தோடு அடிக்கடி செய்திகள் வெளியாவதால், டி.ஜி.பி அலுவலகத்திலிருந்தும், ஐ.ஜி அலுவலகத்திலிருந்தும் விளக்கம் கேட்டு நச்சரிக்கிறார்களாம். ‘உங்களுக்குத் தெரியாதது எதுவுமில்லை. பதற்றமான மாவட்டம், கொஞ்சம் அப்படி இப்படித்தானே இருக்கும்...’ என்று மாவட்ட காவல் அதிகாரி அசால்ட்டாகப் பதிலளிக்க, மேலதிகாரிகள் டென்ஷனில் கத்திவிட்டார்களாம்.
இதில், மாவட்ட அதிகாரி டோட்டல் அப்செட்டாம். டோஸ் விழுவதைச் சமாளிக்க, ‘மாவட்டத்திலுள்ள முக்கியமான இன்ஃபார்மர்கள், பிரஸ் ஆட்களை நேரில் அழைத்து, ‘உங்களுக்குத் தெரிந்த தகவல்களை எனக்கு பர்சனலாகச் சொல்லுங்கள்... பார்த்துக்கொள்ளலாம்...’ என்று கோரிக்கை விடுத்திருக்கிறார் அந்த மாவட்ட அதிகாரி. அந்தத் தகவலும் மேலிடத்துக்குச் செல்லவே, ‘இப்படி யாராவது கோரிக்கை வைப்பார்களா... ஏன் இந்தத் தேவையில்லாத வேலை...’ என வறுத்தெடுத்துவிட்டார்களாம் மேலதிகாரிகள்!