ரங்கராஜ் - ஜாய் கிறிசில்டா விவகாரம்: `இதில் தலையிட எங்களுக்கு அதிகாரம் இருக்கு’ ...
"தனிக்கட்சி ஆரம்பிச்சிக்கோ அதான் உனக்கு நல்லது" - அன்புமணிக்கு ராமதாஸ் எச்சரிக்கை
பாமக நிறுவனர் ராமதாஸ் அக்டோபர் 6-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
2013-ல் இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டதையடுத்து தற்போது பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராமதாஸ், அடுத்த நாளே டிஸ்சார்ஜ் ஆனார்.
இதற்கிடையில், அவர் ஐ.சி.யூ-வில் இருந்ததால் நேரில் சந்திக்க முடியவில்லை என்று அன்புமணி பேசியிருந்தார் .

இந்த நிலையில், ராமதாஸ் இன்று தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் ராமதாஸ், ``இடையில் சில வாரங்கள் உங்களை (பத்திரிகையாளர்கள்) சந்திக்க முடியவில்லை என்றாலும், இனி தொடர்ச்சியாக நாம் சந்திப்போம்.
12 வருடங்களுக்கு முன் எனக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ரத்தக் குழாய்கள் என்ன நிலையில் இருக்கிறது என்று பார்ப்பதற்காகச் சமீபத்தில் அப்போலோவில் நானே சேர்ந்திருந்தேன்.
மருத்துவர்கள், எல்லாம் சரியாக இருக்கிறது என்று கூறி அப்போதே அனுப்பிவிட்டார்கள். ஒருநாள் மட்டும் இருந்துவிட்டு மறுநாளே வீட்டுக்கு கிளம்பிவிட்டேன்.
ஒன்றிரண்டு பேரைத் தவிர தமிழ்நாட்டில் இருக்கின்ற முக்கிய அரசியல் தலைவர்கள் கட்சி பேதமின்றி, இயக்க பேதமின்றி நேரில் வந்தும், தொலைபேசியிலும் நலம் விசாரித்தார்கள்.
இப்போது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கட்சி மட்டும் வரவில்லை. மருத்துவமனையில் எல்லோரும் பார்க்கும்படியாகத்தான் இருந்தேன்.
ஐ.சி.யூ-வில் நான் இல்லை. ஆபத்தான நிலையில் இருந்தால்தான் ஐ.சி.யூ-வில் சேர்ப்பார்கள். அப்படிப்பட்ட நிலைமை எனக்கு ஏற்படவில்லை.

ஒரு கும்பலுக்குத் தலைவராக இருப்பவர் பேசிய பேச்சுக்கள் தமிழ்நாட்டிலுள்ள அனைவரையும் உலுக்கியிருக்கும்.
`அய்யாவுக்கு எதாச்சும் ஆச்சுன்னா தொலைச்சிடுவேன். நாடகமாட்றீங்களா, அய்யா உடல்நலத்துடன் இருக்கிறார்' எனக் கூறியிருக்கிறார். படிக்காத மாடு மேய்க்கின்ற சிறுவன் கூட இப்படிப்பட்ட சொற்களைக் கொட்டியிருக்க மாட்டான்.
அதனால்தான் இவருக்குத் தலைமைப் பண்பு இல்லை என்று கூறியிருந்தேன்.
பா.ம.க-வை தோற்றுவித்தது நான். உழைப்பு என்னுடையது. ஆனால், இப்போது என்னுடைய கட்சி என்று அவர் சொல்வதில் எந்தவித நியாயமுமில்லை. அப்படிச் சொல்லவும் கூடாது.
தேர்தல் கமிஷன், கோர்ட் எல்லாவற்றையும் சந்திப்போம். இதெல்லாம் நடக்கும் என்று கட்சி ஆரம்பித்தபோது எனக்குத் தெரியாது. ஆரம்பித்த பிறகும் எனக்குத் தெரியாது.
இப்போதும் சொல்கிறேன் பா.ம.க-வுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

ஒரு தனி கட்சி ஆரம்பிச்சிக்கோ, அதுதான் உனக்கும் நல்லது, உன்னைச் சுற்றியிருக்கும் சில பேருக்கும் நல்லது.
என்னுடைய வளர்ப்பு சரியாக இருக்கிறது என்று நிரூபிக்க வேண்டுமானால், உடனடியாக ஒருவாரத்துல தனிக்கட்சி ஆரம்பிச்சிக்கோ.
ஆர். அன்புமணி-னு இனிஷியல் வேணும்னா போட்டுக்கலாம். அதுக்கு எந்த ஆட்சேபனையும் இருக்க முடியாது.
டிசம்பர் 30-ம் தேதி பொதுக்குழுவில், முடிவெடுக்கின்ற அதிகாரத்தை எனக்கு கொடுப்பார்கள். மக்கள் மற்றும் கட்சியினர் நினைக்கும் முடிவை நான் எடுப்பேன்" என்று கூறினார்.