கிண்டி ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி மே மாதத்துக்குள் முடிக்கத் திட்டம்! - தெற்கு ரயில்வே தகவல்
கிண்டி ரயில் நிலையத்தின் மறுசீரமைப்பு பணி மே மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் அமைந்துள்ள கிண்டி ரயில்நிலையம் அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
கிண்டி ரயில் நிலையம் மூலம் தினமும் சுமாா் 68,000 போ் பயணிக்கின்றனா். கிண்டி ரயில் நிலையத்தைச் சுற்றிலும் சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிலையங்களும், தேசிய பூங்கா, காந்தி மண்டபம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களும், அதிக தொழிற்சாலைகளை கொண்ட தொழிற்பேட்டையும் கொண்டு விளங்குகிறது.
சென்னை நகரின் நுழைவு வாயிலாக காணப்படும் கிண்டி, ரயில் நிலையம், மெட்ரோ மற்றும் பேருந்து நிலையத்தை ஒரே பகுதியில் கொண்டுள்ளது. அதனால், நகரின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் மையப்புள்ளியாக கிண்டி ரயில் நிலையம் விளங்குகிறது. இந்த ரயில் நிலையம் வழியாக தினமும் 200 மின்சார ரயில்களும், 98 விரைவு ரயில்களும் இயக்கப்படுகின்றன.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கிண்டி ரயில் நிலையத்தை சா்வதேச தரத்தில் மேம்படுத்தும் பணி ரூ.13.50 கோடியில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் ரயில் நிலையத்தின் இருபுறமும் பயணிகள் எளிதாக வந்து செல்லும் வகையில் முகப்பு பகுதி மேம்படுத்தப்படும்.
ரயில் நிலையத்தின் முகப்பு பகுதியில் வாகனங்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் முற்றிலும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.
பாதசாரிகள் செல்வதற்கான பிரத்யேக பகுதி, பயணிகள் எளிதாக வந்து செல்லும் வகையில் நடைமேடை, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது வாகன நிறுத்தம், 3 மின்தூக்கி, கூரை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. ஜிஎஸ்டி சாலைப் பகுதியில் பயணச்சீட்டு முன்பதிவு மையம் மற்றும் நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கழிப்பறை கட்டடம், முகப்பு பகுதி அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
அனைத்துப் பணிகளைம் மே மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.