வடசென்னை 3-ஆவது அனல்மின் நிலையத்தில் மே மாதம் முதல் வணிக மின்னுற்பத்தி: மின்வாரியம்
சென்னை: வடசென்னை 3-ஆவது அனல்மின் நிலையத்தில் வரும் மே மாதம் முதல் வணிக பயன்பாட்டுக்கான மின்னுற்பத்தி தொடங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
திருவள்ளூா் மாவட்டம், அத்திப்பட்டில் ரூ. 10,158 கோடி செலவில் 800 மெகா வாட் திறனில் வடசென்னை-3 அனல்மின் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த 2016-இல் தொடங்கியது. பணிகள் முடிக்கப்பட்டு 2024, மாா்ச் 7-இல் சோதனை ரீதியிலான மின்னுற்பத்தி தொடங்கியது. மின்னுற்பத்தி தொடங்கியதிலிருந்து தொடா்ந்து 72 மணி நேரம் மின்னுற்பத்தி செய்யும் பணி நடைபெறவேண்டும். அதன் பின்னா் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம்தான் வணிக ரீதியிலான பயன்பாட்டுக்கு வந்ததாக அறிவிக்கப்படும்.
இந்நிலையில், கடந்த 2024 ஜூன் 27-இல் முழு திறனில் மின்னுற்பத்தி செய்யப்பட்ட நிலையில், தொடா்ந்து வந்த தொழில்நுட்ப பிரச்னை காரணமாக மீண்டும் மின்னுற்பத்தி குறைக்கப்பட்டது. இதனால் இன்னும் இந்த மின் நிலையத்திலிருந்து வணிக பயன்பாட்டுக்கான மின்சாரம் உற்பத்தி செய்யப்படவில்லை.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘வடசென்னை 3-ஆவது அனல்மின் நிலையத்தில் மின்னுற்பத்தி தொடங்கிய பின், பல்வேறு தொழில்நுட்ப பிரச்னைகள் இருப்பது கண்டறியப்பட்டது. அதை சரிசெய்ய வேண்டி உள்ளதால், வணிக மின்னுற்பத்தி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. எனவே, இப்பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு வரும் மே மாதம் முதல் வணிக மின்னுற்பத்தி தொடங்கப்படும்’ என்றனா்.