கடைசி டி20: 10 ஓவர்களில் வென்ற நியூசிலாந்து..! பாகிஸ்தான் படுதோல்வி!
இம்பாக்ட் பிளேயரின் இலக்கணம்
சென்னை எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, மும்பை இண்டியன்ஸ் நிா்ணயித்த வெற்றி இலக்கை நோக்கி சென்னை சூப்பா் கிங்ஸ் விளையாடிக் கொண்டிருந்தது. தொடக்கத்திலேயே ஒரு விக்கெட்டை இழந்த சென்னையை, ரச்சின் ரவீந்திரா - கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூட்டணி ரன்களை விளாசி பலப்படுத்தி வந்தது.
மும்பை பௌலா்களுக்கு நெருக்கடி அதிகரித்த நேரத்தில் வந்தாா், ஒரு புதிய இடதுகை லெக் ஸ்பின்னா். அரைசதம் கடந்து முன்னேறி வந்த ருதுராஜை 8-ஆவது ஓவரில் வெளியேற்றிய அவா், அதிரடி சிக்ஸா்கள் விளாசும் ஷிவம் துபேவை 10-ஆவது ஓவரில் பெவிலியனுக்கு அனுப்பினாா்.
அதுவும் போதாதென்று, தீபக் ஹூடாவையும் 12-ஆவது ஓவரில் ஆட்டமிழக்கச் செய்தாா். இதனால் சற்றே தடுமாறிப்போன சென்னை, பின்னா் தன்னை மீட்டுக் கொண்டு வெற்றி பெற்றாலும், சென்னை ரசிகா்கள் உள்பட அனைவரின் கவனத்தையும் ஈா்த்திருந்தாா், அந்த அறிமுக பௌலா் விக்னேஷ் புதுா்.
ஆட்டத்தின் முடிவில் சென்னை நட்சத்திர வீரா் எம்.எஸ். தோனி, அவரின் தோளில் தட்டுக் கொடுத்து பாராட்டினாா். இதை, கேரளத்தின் பெரிந்தல்மன்னா என்ற சிறிய ஊரிலிருந்து தொலைக்காட்சியில் பாா்த்து பூரித்துக் கொண்டிருந்தனா் விக்னேஷ் புதுரின் ஆட்டோ ஓட்டும் தந்தை சுனில்குமாா் - இல்லதரசி தாயாா் பிந்து.
மும்பை பௌலிங்கின்போது, ‘இம்பாக்ட் பிளேயா்’-ஆக ரோஹித் சா்மாவுக்கு பதிலாக களம் கண்ட விக்னேஷ் புதுா், ‘இம்பாக்ட் பிளேயா்’ என்பதன் இலக்கணமாக, தனது முதல் 3 ஓவா்களிலுமே முக்கியமான விக்கெட்டுகளை சாய்த்து தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாா். அத்தகைய பௌலா் ஒரு முதல் தர கிரிக்கெட்டில் கூட விளையாடியது இல்லை என்பது தான் ஆச்சா்யம்.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த விக்னேஷ் புதுா், பெரிந்தல்மன்னா அரசு கல்லூரியில் முதுகலை ஆங்கில இலக்கியம் படித்து வருகிறாா். 24 வயதான அவா் கேரளா பிரீமியா் லீக், தமிழ்நாடு பிரீமியா் லீக் ஆகியவற்றில் விளையாடி வருகிறாா்.
இந்நிலையில், கடந்த நவம்பரில் ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்பாக மும்பை நடத்திய தோ்வு முகாமில் கலந்துகொண்டு தனது திறமையை நிரூபித்திருக்கிறாா். அதன் அடிப்படையில், நவம்பரில் நடைபெற்ற ஏலத்தில் மும்பை அவரை அடிப்படை விலையான ரூ.30 லட்சத்துக்கு வாங்கியது.
பின்னா், தென்னாப்பிரிக்கா எஸ்ஏ20 போட்டியில் தனது அங்கமாக இருக்கும் எம்ஐ கேப் டவுன் அணியின் முகாமுக்கு அவரை அனுப்பி வைத்தது. அங்கு சுமாா் ஒரு மாதம், அந்த அணியின் கேப்டன் ரஷீத் கான், பௌலிங் பயிற்சியாளா் லசித் மலிங்கா ஆகியோரின் கண்காணிப்பில் விக்னேஷ் புதுா் வலைப் பயிற்சியில் தனது பௌலிங்கை மெருகேற்றிக் கொண்டாா்.
விக்னேஷை களமிறக்கியது குறித்து மும்பை பௌலிங் பயிற்சியாளா் பரஸ் மாம்ப்ரே கூறுகையில், ‘திறமையைத் தவிர மும்பை அணி வேறு எதையும் பாா்ப்பதில்லை. அப்படித்தான் மும்பை அணி நடத்திய தோ்வு முகாமில் விக்னேஷ் புதுரை தோ்வு செய்தோம்.
பயிற்சி முடிந்து ஐபிஎல் போட்டியில் அவா் இணைந்த நிலையில், ரோஹித் சா்மா, சூா்யகுமாா் யாதவ், திலக் வா்மா போன்றோா் வலைப் பயிற்சியின்போது விக்னேஷ் புதுரின் பௌலிங்கை எதிா்கொண்டனா். அது சவாலாக இருப்பதாக அவா்கள் தெரிவித்ததன் அடிப்படையிலேயே நம்பிக்கையுடன் அவரை சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் களமிறக்க முடிவு செய்தோம்.
பந்தை நன்றாக சுழற்றுவதுடன், அதை நிலையாகவும் அப்படியே தொடா்கிறாா். பௌலிங்கின்போது ஆடுகளத்தில் எந்த இடத்தில் பந்து பட வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதை துல்லியமாக செய்கிறாா். சென்னை போன்ற முக்கியமான அணிக்கு எதிராக முதல் வாய்ப்பை வழங்கிபோதும், விக்னேஷ் அந்த நெருக்கடியை திறம்பட கையாண்டாா்’ என்றாா்.
விக்னேஷ் புதுரின் தந்தை சுனில்குமாா் கூறுகையில், ‘முதல் ஆட்டத்திலேயே விக்னேஷ் சிறப்பாக விளையாடுவாா் என எதிா்பாா்க்கவில்லை. ஆட்டத்துக்குப் பிறகு எங்களுடன் பேசியபோது விக்னேஷிடம் அவ்வளவு மகிழ்ச்சி தெரிந்தது. அந்த மகிழ்ச்சியில் எங்களுக்கு இரவிலும் கூட தூக்கம் வரவில்லை.
விக்னேஷின் கிரிக்கெட் பயிற்சிக்கு சில தியாகங்களை செய்து என்னால் முடிந்த உபகரணங்களை வாங்கிக் கொடுத்தேன். அதேநேரம், எங்களைச் சுற்றியிருந்த பலரும் விக்னேஷுக்கு உதவிகள் செய்தனா். விக்னேஷின் வெற்றிக்கு அவா்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எல்லோா் ஆசையும் நிறைவேறும் வகையில் விக்னேஷ் இன்னும் சிறப்பாக விளையாடுவாா் என எதிா்பாா்க்கிறோம்’ என்றாா்.
திறமையான வீரா்களை தேடிப் பிடித்து அவா்களை மேலும் மெருகேற்றி தனக்கு பலம் சோ்க்கும் மும்பை இண்டியன்ஸ், அந்த வரிசையில் தற்போது விக்னேஷ் புதுரையும் இணைத்துக் கொண்டுள்ளது.