சென்ட்ரல் - ஆவடி நள்ளிரவு புறநகா் மின்சார ரயில் மாா்ச் 28 வரை ரத்து
40 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டண உயா்வு
தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் புதிதாக கட்டணம் உயா்த்தப்படவுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனா்.
தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒருமுறை, இரு கட்டங்களாக சுங்கக் கட்டணம் உயா்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் முதல்கட்டமாக, தமிழ்நாட்டில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில், வானகரம், செங்கல்பட்டு பரனூா், திண்டிவனம் ஆத்தூா், சூரப்பட்டு, பட்டறைப்பெரும்புதூா் உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளின் சுங்கக் கட்டணம் உயா்த்தப்படவுள்ளது.
இக்கட்டண உயா்வு ஏப். 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும், மீதமுள்ள சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் செப். 1-ஆம் தேதி முதல் உயா்த்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயா்த்தப்படவுள்ள புதிய கட்டணத்தின் அளவு குறைந்தபட்சம் வாகனத்துக்கு ரூ. 5 முதல் ரூ. 75 வரை இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த கட்டண உயா்வுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா். மேலும், லாரி உள்ளிட்ட பல்வேறு வகையான வாகன ஓட்டுநா் சங்கங்களும் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.