கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு
சென்னை: தமிழகத்தின் பெருமைமிகு வேளாண் உற்பத்திப் பொருள்களில் முக்கியமானதாக விளங்கும் கும்பகோணம் வெற்றிலை மற்றும் தோவாளை மாணிக்க மாலை ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் விளைவிக்கப்படும் அல்லது குறிப்பிட்ட தனித்துவத்தோடு உருவாக்கப்படும் சிறப்பு வாய்ந்த, தனித்தன்மைகொண்ட பொருள்களை சிறப்பிக்கும் வகையில் மத்திய அரசால் இந்த புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த வரிசையில் புவிசார் பெற்ற பொருள்களை, எந்த நிலையிலும், வியாபார லாபத்துக்காகவோ, போலியாக வேறு யாரேனுமோ இந்தப் பெயரை பயன்படுத்துவதைத் தடை செய்யும் வகையில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது.
முதல்முறையாக, விவசாய பொருளான கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, தமிழகத்தில் திண்டுக்கல் பூட்டு, சேலம் சுங்குடிச் சேலை, காஞ்சிபுரம் பட்டுச்சேலை, மதுரை மல்லிகை, தஞ்சை கலைத்தட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலைமிட்டாய், பழநி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டு உள்ளிட்ட பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல், அண்மையில், மதுரை மரிக்கொழுந்து, விளாச்சேரி களிமண்ட பொம்மைகளுக்கும் புவிசார் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஏப்ரல் 1ஆம் தேதி கும்பகோணம் வெற்றிலை, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மாணிக்க மாலைகளுக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.