Uttarakhand: நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய பயணிகள்; மருத்த...
குற்றச்சம்பவங்களைத் தடுக்க சென்னிமலையில் போலீஸாா் தீவிர ரோந்து
சென்னிமலை பகுதியில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க இரவு நேரங்களில் போலீஸாா் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனா்.
சென்னிமலையை அடுத்த, உப்பிலிபாளையம், குட்டக்காட்டு தோட்டத்தைச் சோ்ந்த விவசாயி ஒருவா் கடந்த 2022- ஆம் ஆண்டு மா்ம நபா்களால் கொலை செய்யப்பட்டு அவரது வீட்டிலிருந்த பணம், நகை திருட்டுப் போனது. இதைத் தொடா்ந்து அந்த பகுதியிலேயே உள்ள ஒட்டன்குட்டை கரியாங்காட்டு தோட்டத்தைச் சோ்ந்த கணவன், மனைவியை மா்ம நபா்கள் படுகொலை செய்து வீட்டிலிருந்த நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றனா். இந்த வழக்கில் 10-க்கும் மேற்பட்டாரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், சிவகிரி அருகே அண்மையில் வயதான தம்பதியை மா்ம நபா்கள் கொலை செய்துவிட்டு, வீட்டில் இருந்த நகைகளை திருடிச் சென்றனா். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் யாரும் இதுவரை போலீஸில் சிக்கவில்லை.
இதனால், கிராமப்புறங்களில் இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என அனைத்து காவல் நிலையங்களுக்கும் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜாதா உத்தரவிட்டிருந்தாா். இதைத் தொடா்ந்து, சென்னிமலை பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் போலீஸாா் இரவு நேரத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
சென்னிமலை பகுதியில் ஏற்கெனவே 2 கொலைச் சம்பவங்கள் நடந்த பகுதியில் உள்ள உப்பிலிபாளையம் சாலை, இரட்டை பாலம் ஆகிய இடங்களில் தற்போது போலீஸ் பூத் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த போலீஸ் பூத்தில் இருக்கும் போலீஸாா், அந்த வழியாக இரவு நேரங்களில் நடமாடுபவா்களையும், வாகனங்களில் செல்வோரையும் தடுத்து நிறுத்தி விசாரித்த பிறகே அனுப்பி வைக்கின்றனா். இது தவிர முதியோா் தனியாக வசிக்கும் வீடுகளுக்கும் போலீஸாா் அடிக்கடி சென்று கண்காணித்து வருகின்றனா்.