‘கோ பேக் கவர்னர்’: உ.பி. பேரவையில் எதிர்க்கட்சிகள் முழக்கம்!
உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநரை வெளியேறச் சொல்லி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை அமளியில் ஈடுபட்டனர்.
உத்தரப் பிரதேச சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று(பிப். 18) தொடங்கியுள்ளது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் ஆனந்திபென் படேல் உரையுடன் தொடங்கப்பட்டது.
இந்த நிலையில், சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாகவே மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை அரசு மறைப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து சமாஜவாதி மற்றும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து, சட்டப்பேரவையில் ஆளுநர் ஆனந்திபென் உரையாற்ற தொடங்கியவுடன், ’கோ பேக் கவர்னர்’ என்று எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.
சட்டப்பேரவை நடவடிக்கைக்கு இடையூறு அளிக்காமால் சுமுகமாக பட்ஜெட் தொடர் நடைபெற ஒத்துழைக்குமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் முதல்வர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தினார்.
இதையும் படிக்க : நள்ளிரவில் தேர்தல் ஆணையர் நியமனம் அவமரியாதைக்குரியது: ராகுல் காந்தி
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
கடந்த ஜனவரி 30 ஆம் தேதி கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.