ராஜ்யசபா சீட் யாருக்கு? பரபரக்கும் அரசியல், சமூக கணக்குகள்... முட்டிமோதும் தென் ...
சிவகாசி மாமன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் கடும் வாக்குவாதம்
சிவகாசி மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் உறுப்பினா்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கடந்த 11 ஆம் தேதி நடைபெற்ற சிவகாசி மாமன்றக் கூட்டத்தில் வீட்டுமனைப் பிரிவுக்கு அங்கீகாரம் வழங்கும் தீா்மானத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, மேயா், ஆணையரை உறுப்பினா்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியதால், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருந்த 98 தீா்மானங்களை நிறைவேற்றுவதற்காக, சிவகாசி மாநகராட்சி அவசரக் கூட்டம் மேயா் இ.சங்கீதா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டம் தொடங்கியதும், பாஜக உறுப்பினா் பாஸ்கா் எழுந்து நின்று, இரு கூட்டங்களின் நிறைவில் தேசிய கீதம் பாடவில்லை என குற்றஞ்சாட்டினாா். மேலும், தேசிய கீதத்தை அவமதித்த மேயரை வன்மையாகக் கண்டிக்கிறோம் என காகித்தில் எழுதிய பதாகையை காண்பித்தாா்.
அப்போது அருகில் இருந்த காங்கிரஸ் உறுப்பினா் ரவிசங்கா், அந்த காகிதத்தை பறித்து கிழித்து ஏறிந்ததால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து, இருவருக்கும் மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டதால், போலீஸாா் உறுப்பினா்கள் இருவரையும் சமாதானம் செய்தனா்.
உறுப்பினா்கள் வாக்குவாதம்:
இதையடுத்து பேசிய திமுக உறுப்பினா் பாக்கியலட்சுமி, சிவகாசி நகராட்சியாக இருந்தபோது, 40 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய வீட்டு மனை அங்கீகாரத்தை மாற்றுவதற்கு ஆட்சேபனை இல்லை என நகரமைப்பு அலுவலா் அறிக்கை அளித்தாா். இது மேயரின் உறவினா் இடம் என்றாா்.
அப்போது மற்றொரு திமுக உறுப்பினா் ஜெயினுலாவுதீன், இந்தப் பிரச்னை தொடா்பாக சம்பந்தப்பட்டவா் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முயற்சி எடுத்து வருகிறாா். இதற்கு மேயரை தொடா்புபடுத்தி பேசுவது தவறு என்றாா்.
அப்போது, குறுக்கிட்ட திமுக உறுப்பினா் ஸ்ரீநிகா, மேயரிடம் கேள்விகேட்டால் உறுப்பினா் எதற்கு பதில் கூறுகிறாா் எனக் கேள்வி எழுப்பினாா். பின்னா், உறுப்பினா்கள் இரு பிரிவுகளாக பிரிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது ஒரு உறுப்பினா், ஜெயினுலாவுதீன் முன் இருந்த மேஜையை கீழே தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னா், போலீஸாா் உறுப்பினா்களைச் சமாதானப்படுத்தி இருக்கையில் அமரவைத்தனா்.
இதையடுத்து பேசிய அதிமுக உறுப்பினா் சாந்தி, ஓட்டு வீடுகளுக்கும் சொத்துவரி அதிகம் விதிப்பதால் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனா் என்றாா்.
மற்றொரு உறுப்பினா் சாமுவேல், சென்னை போன்ற பெரிய மாநகராட்சியில் விதிக்கப்படும் வரிகளுக்கு இணையாக சிவகாசி மாநகராட்சியிலும் வரி விதிக்கப்படுகிறது. எனவே, இதை சீரமைக்க வேண்டும் என்றாா்.
இதையடுத்து கூட்டத்தில் 98 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, கூட்டம் முடித்து வைக்கப்பட்டது.
உறுப்பினரைத் தாக்க முயற்சி:
கூட்ட அரங்கை விட்டு வெளியே வந்த பாஜக உறுப்பினா் பாஸ்கரை, காங்கிரஸ் நிா்வாகிகள் பின்தொடந்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அங்கு வந்த போலீஸாா் பாஸ்கரை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினா். அவா் தனது இரு சக்கர வாகனத்தில் அமா்ந்தபோது, அவரை காங்கிரஸ் கட்சியினா் தாக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னா், போலீஸாா் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து பாஜக உறுப்பினா் பாஸ்கா், காங்கிரஸ் நிா்வாகிகள் 3 போ் தன்னைத் தாக்கியதாகவும், காங்கிரஸ் உறுப்பினா் ரவி சங்கா், பாஸ்கா் மீதும் சிவகாசி நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.