விடுவிக்கப்பட்ட Hostages: உற்சாகத்தில் Israel - Netanyahu வைக்கும் Suspense | De...
சிவகாசி: "மேயர் போட்டோ ஷூட் நடத்துவதில்தான் ஆர்வமாக இருக்கிறார்" - திமுக கவுன்சிலர் குற்றச்சாட்டு
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியில் 3 மாதங்களுக்குப் பிறகு மாமன்றக் கூட்டம் மேயர் சங்கீதா தலைமையில் துணை மேயர் பிரியா, ஆணையர் சரவணன் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் 173 தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன. மாமன்றக்கூட்டம் தொடங்கிய உடன், சிவகாசி மாநகராட்சி சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞரை நீக்க வேண்டும் என 30 கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு மனுவை திமுக கவுன்சிலர் பாக்யலட்சுமி அளித்தார். 3 ஆண்டுகளாக பூங்காப் பிரச்னை உள்ளது.

ஆனால் ஆக்கிரமிப்பாளர் பூங்காவுக்கு ஆதரவாக இருப்பது போன்று தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
ஆக்கிரமிப்பு செய்தவர்கள் பாதுகாவலர்கள் என்றால் ஆக்கிரமிப்பு செய்வது ஆணையாளரா என்கின்ற கேள்விகள் எழுந்தன.
பின்னர் விசாரணையில் நீதிமன்ற நடவடிக்கை குறித்து மாநகராட்சி வழக்கறிஞர் தெரிவித்த விளக்கத்தில் அவரை நீக்க வேண்டிய அவசியம் எழவில்லை. அந்தத் தீர்மானத்தில் உள்ள பிழை சரி செய்யப்படும் என ஆணையாளர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து திமுக கவுன்சிலர் ஶ்ரீநிகா எழுந்து பேசுகையில், "ஆண்டுக்கு 4 கூட்டங்கள் மட்டுமே நடத்தினால் மக்கள் பிரச்னைகளை எப்படிப் பேச முடியும்? தற்போதைய மேயர் போட்டோ ஷூட் நடத்துவதிலும், தன்னை விளம்பரப்படுத்துவதிலுமே தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்.
சிவகாசி மாநகராட்சியின் நான்கு ஆண்டுகளாக மேயர் பதவி வகிக்கும் இவர் எவ்வித வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ளவில்லை" என்று குற்றஞ்சாட்டினார்.

மேயர் பதவியை விட்டு விலக வேண்டும் என்றும் மீதமிருக்கும் ஒரு ஆண்டில் நல்லவர்கள் மேயராக வரட்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனுடன் மாமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்ட அனைத்துத் தீர்மானங்களும் ரத்து செய்யப்பட்டு கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையடுத்து எந்தத் தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் பாதியிலேயே கூட்டம் முடிக்கப்பட்டு மேயர் சங்கீதா கூட்டத்தை விட்டு வெளியேறினார்.