Karur: தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்; கரூர் துயரத்திற்கு தீர்மானம்...
Doctor Vikatan: இதயத்தில் பொருத்தப்பட்ட ஸ்டென்ட் நகருமா, எவ்வளவு பாதுகாப்பானது?
Doctor Vikatan: இதயத்தில் பொருத்தப்பட்ட ஸ்டென்ட்டை பிற்காலத்தில் அகற்ற முடியுமா, நடக்கும்போதும், ஓடும்போதும் ஸ்டென்ட் வேறு இடத்துக்கு நகர்ந்துபோக வாய்ப்பிருக்கிறதா?மெட்டலால் செய்யப்பட்டதுதானே ஸ்டென்ட் (stent). அது உடலுக்குள் இருப்பது எந்த அளவுக்குப் பாதுகாப்பானது?
பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன்

நம்மில் பலரும் ஸ்டென்ட் பொருத்திக்கொண்டு நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பலருக்கும் இந்தக் கேள்வி இருக்கிறது.
ஆனாலும், அதைக் கேட்டால் யார், என்ன நினைப்பார்களோ என்ற தயக்கத்தில் அப்படிக் கேட்பதைத் தவிர்க்கிறார்கள். அவர்கள் எல்லோரின் சார்பாகவும் இந்த விளக்கத்தை அளிக்கிறேன்.

இதயத்தின் ரத்தக்குழாய்க்குள் ஸ்டென்ட் எனப்படும் கருவியை ஒருமுறை பொருத்திவிட்டால், அதை மீண்டும் வெளியே எடுப்பதற்கான சாத்தியங்கள் இல்லை என்பதுதான் உண்மை.
அப்படியானால், அந்த ஸ்டென்ட் அங்கேயே இருக்குமா என்றால், ஆமாம்... அங்கேயேதான் இருக்கும்.
ஸ்டென்ட்டுகளில் லேட்டஸ்ட்டாக, தானாக உறிஞ்சப்படும், 'பயோ அப்சார்பபிள்' ஸ்டென்ட்டுகள் (bioabsorbable stent) வந்துள்ளன. அந்த வகை ஸ்டென்ட்டை உள்ளே பொருத்திவிட்டால், அது 6 முதல் 8 மாத காலத்திற்குள் உள்ளே உறிஞ்சப்பட்டுவிடும்.
ஆனால், இந்த வகை ஸ்டென்ட்டில் சில சிக்கல்கள் இருப்பதால், பெரும்பாலான மருத்துவர்கள் இதைப் பரிந்துரைப்பதில்லை. இது எதிர்பார்த்த அளவு ரிசல்ட்டையும் கொடுப்பதில்லை.

எனவே, தற்போது புழக்கத்தில் உள்ள ஸ்டென்ட் பாதுகாப்பானது. அது உடலால் ஏற்றுக்கொள்ளப்படுகிற உலோகம் என்பதால் பெரும்பாலும் பிரச்னைகளைத் தருவதில்லை. இதயத்தின் ரத்தக் குழாயில் பொருத்தப்பட்ட ஸ்டென்ட், நடப்பது, ஓடுவது, உடற்பயிற்சிகள் செய்வது போன்றவற்றால் நகர வாய்ப்பே இல்லை. பொதுவாக, ஸ்டென்ட்டை உள்ளே வைத்து, பலூன் மூலம் விரிவடையச் செய்து, ரத்தக் குழாயினுள் நன்கு பதியும்படி செய்வதால், அது நகர்வதற்கு வாய்ப்பில்லை. எனவே, ஸ்டென்ட் பொருத்தப்பட்டவர்கள், அது குறித்த அறியாமையில் பயம் கொள்ளத் தேவையில்லை.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.