செந்தில் பாலாஜியின் நண்பர்கள் வீடுகளில் சோதனை
கரூர்: கரூர் மற்றும் சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் வீடுகளில் வியாழக்கிழமை காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மத்தியப் படையினர் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருக்கும் வி.செந்தில் பாலாஜி. கரூர் மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, போக்குவரத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்குகளை பதிவு செய்தனர்.
இந்த மோசடியில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத்துறையும் புதிதாக ஒரு வழக்கை பதிவு செய்து, விசாரணை செய்தது. மத்தியக் குற்றப்பிரிவு வழக்கை ரத்து செய்யும்படியும், அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை கோரியும் செந்தில் பாலாஜி, உயர்நீதிமன்றத்தில் முறையீட்டதினால், மத்தியக் குற்றப்பிரிவு வழக்குகள் ரத்து செய்யப்பட்டது. அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதில் மத்தியக் குற்றப்பிரிவு ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும், அமலாக்கத்துறை விசாரணை அனுமதி வழங்கியும் அண்மையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
சிம்பொனி இசை நிகழ்ச்சி நாட்டின் பெருமை: இளையராஜா நெகிழ்ச்சி

கடந்த 2023 இல் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அப்போது அவரது சகோதரர் வீடு மற்றும் ஆதரவாளர் வீடுகளில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி அண்மையில் ஜாமினில் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களாக கருதப்படும் கரூர் ராயனூரில் வசிக்கும் கொங்கு மெஸ் மணி மற்றும் கரூர் ஆத்தூர் பிரிவு அருகே கோதை நகரில் வசிக்கும் சக்தி மெஸ் சக்திவேல் மற்றும் செந்தில் பாலாஜியின் ஆதரவாளரும் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாருமான எம்.சி.சங்கரின் வீடு இருக்கும் கரூர் பழனியப்பா நகரியிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையிலும் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரளாவில் இருந்து 5 கார்களில் வந்த அமலாக்கத்துறையினர் சுமார் 20 பேர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மத்தியப் படையினர் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது.
எதற்காக சோதனை, என்ன நோக்கத்துக்காக சோதனை என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்த சோதனை அரசியல் கட்சிகள் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.