Aus vs Ind : 'குறுக்கிட்ட மழை; முதல் போட்டியிலேயே தோற்ற இந்திய அணி!' - என்ன நடந்...
சென்னை ஸ்வீட் மேளா: கல்கத்தா இனிப்பு டு கோதுமை அல்வா! - சுடச்சுட இனிப்பு, கார வகை பலகாரங்கள்
சென்னையில் வருடம் தோறும் இனிப்பு மேளா நடத்தி வீட்டின் பாரம்பரிய முறையில் சுவையான இனிப்பு மற்றும் காரப் பலகாரங்களை விற்பனை செய்து வருகிறது அறுசுவை அரசு கேட்டரிங் நிறுவனம்.
அந்த வகையில் இந்த முறை சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை அருகே இருக்கும் எத்திராஜ் கல்யாண நிலையத்தில் இரண்டாவது ஆண்டாக இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இது பற்றி மேளாவின் நிறுவனர் நடராஜன் அவர்களின் மகன் ஶ்ரீதர் கூறுகையில், ``தொடர்ந்து மூன்றாவது வருடமாக இதை நடத்தி வருகிறோம். இரண்டாவது ஆண்டாக இந்த எத்திராஜ் கல்யாண நிலையத்தில் நடத்தி வருகிறோம்.

எங்களுக்கென்று பேக்கரியோ, கடைகளோ என்பது கிடையாது. தீபாவளி என்றால் எல்லோரும் மகிழ்ச்சியாக இனிப்பு சுவைத்து கொண்டாட வேண்டும் என்ற நோக்கம் தான் எங்களுக்கு. எனது தந்தையின் ஆசிர்வாதத்தோடு இதனை இனி வருடம் வருடம் தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளோம்.
தீபாவளிக்கு முந்தைய நாட்களுக்கு ஆன ஐந்து நாட்கள் மட்டுமே இது நடைபெறும். இந்த வருடம் அக்டோபர் 12 முதல் அக்டோபர் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. வாடிக்கையாளர்களின் வருகையும் அமோகமாகவே இருக்கிறது.

இந்த வருடம் கல்கத்தாவின் இனிப்பு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த முறை கோதுமை அல்வா சிறப்பாக விற்பனையாகிறது. எங்கள் தந்தை நடராஜ ஜயர். அவரது மூன்றாவது பையன் நான். அருசுவை அரசு கேட்டரிங் சர்வீஸ் நடத்துகிறோம். எனது மகனும் இந்தத் துறையில் ஆர்வமாக இணைந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தென்னிந்தியாவின் அனைத்து இனிப்பு வகைகளும் இங்கே விற்கப்படுகின்றன.
விலைப்பட்டியலைப் பொருத்தவரை சாதாரண விலையில்தான் நாங்கள் விற்பனையில் ஈடுபடுகிறோம். வாடிக்கையாளர்கள் எங்களிடமிருந்து எதிர்பார்ப்பது வீட்டு பாரம்பரிய வீட்டு சுவையில் இனிப்பு மற்றும் கார வகைகள் மட்டுமே. இங்கு கார வகைகளும் சுடச்சுட தயாராகி விற்பனைக்கு வைக்கப்படுகிறது. இதனைப் போன்று மேளாக்கள் நடத்துவது வாடிக்கையாளர்களை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது" என்றார்
திருவல்லிக்கேணியைச் சேர்ந்த வாடிக்கையாளர் நரசிம்மன், ``அறுசுவை நடராஜன் அப்போதே எங்களுக்கு நல்ல பழக்கம். வட இந்திய, தென்னிந்திய அனைத்து இனிப்பு பலகாரங்களும் இங்கே விற்பனை ஆகின்றன" என்றார்.
தொடர்ந்து, ``வருடா வருடம் தீபாவளி சமயத்தில் இங்கே இனிப்புகள் வாங்கி வீட்டுக்கு கொண்டு செல்வது எனக்கு வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. எனக்கு 81 வயதாகிவிட்டது. வயதானாலும் இனிப்பை என்னால் தவிர்க்க முடியவில்லை.” என்றார்,

முதல்முறையாக இந்த இனிப்பு மேளாவிற்கு வருகை தந்த சென்னையைச் சேர்ந்த பிரபு, ``நான் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள பக்கத்தில் பார்த்து இங்கு முதன்முறையாக வந்திருக்கிறேன். இங்கே விற்பனையாகும் இனிப்புகள் அனைத்தும் தரமாகவே இருக்கின்றன. நானும் இந்த முறை இனிப்பு மற்றும் காரப் பலகாரங்களை வாங்கி இருக்கிறேன்” என்றார்.