‘தக் லைஃப்’ கர்நாடகத்தில் வெளியாவதில் சிக்கல்: உச்சநீதிமன்றத்தில் மனு தள்ளுபடி
புது தில்லி: ‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகத்தில் வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது. உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று(ஜூன் 9) தள்ளுபடி செய்து நீதிபதி பி.கே. மிஷ்ரா உத்தரவிட்டார்.
கர்நாடக திரையரங்க சங்கம் தரப்பிலிருந்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஓரிரு சமூக விரோத சக்திகள் கர்நாடகத்தில் தக் லைஃப் திரையிடப்படவுள்ள திரையரங்குகளுக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அவசர வழக்காக இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், இதனை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி மறுத்து விட்டார். மேலும், மனுதாரர் தரப்பிலிருந்து உயர்நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தி மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.