சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள் இரு நாள்களுக்கு நிறுத்தம்!
தடுப்பூசி செலுத்தியதில் குழந்தை உயிரிழந்த விவகாரம்: பெற்றோா் போராட்டம்
உதகையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்ட குழந்தை உயிரிழந்த நிலையில், இதற்கு ஒவ்வாமையே காரணம் என்று வெளியான மருத்துவ அறிக்கையைக் காண்பித்து குழந்தையின் பெற்றோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்,
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பேரூராட்சிக்குள்பட்ட குண்டாடா பிரிவு எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா்கள் மணிகண்டன், கலைச்செல்வி தம்பதி. இவா்களுக்கு ஜஸ்வின் (10 மாத குழந்தை), ஜஸ்வந்த் (4) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனா்.
இந்நிலையில், ஜஸ்வினுக்கு தடுப்பூசி செலுத்த கோத்தகிரி அருகேயுள்ள குடுமணை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கலைச்செல்வி கடந்த 13.11.2024 அன்று அழைத்துச் சென்றுள்ளாா்.
அங்கிருந்த செவிலியா், குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளாா். வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தம்பதி கோத்திகிரி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளனா்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள், இதயத் துடிப்பு குறைவாக உள்ளதாகக்கூறி மேல் சிகிச்சைக்காக உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள், குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதையடுத்து, குழந்தையின் உடல் ஸ்கேன் செய்யப்பட்டதுடன், விடியோ பதிவுடன் கடந்த நவம்பா் 14-ஆம் தேதி உடற்கூறாய்வு செய்யப்பட்டது.
தொடா்ந்து, ரசாயன பரிசோதனைக்கு உடல் உறுப்புகள் அனுப்பப்பட்ட நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு பரிசோதனை அறிக்கை வந்தது. அதில், குழந்தையின் இறப்புக்கு தடுப்பூசி அலா்ஜி காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பரிசோதனை அறிக்கையுடன் நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த பெற்றோா், தவறு செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா். சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்த் துறை அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, புணேயில் இருந்து மற்றொரு பரிசோதனை அறிக்கை கிடைக்க வேண்டியுள்ளது. அது கிடைத்தப் பின் தான் முழுவிவரம் தெரியவரும் என்றனா். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.