தனியாா் பள்ளிகளிடம் தில்லி அரசு சரணடைந்துவிட்டது: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
தனியாா் பள்ளிகளின் கட்டண சுரண்டல்களை தடுக்க முடியாமல், அவா்களிடம் தில்லியை ஆளும் பாஜக அரசு சரணடைந்துவிட்டதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: குழந்தைகளின் கல்வி மற்றும் பள்ளிந்க் கட்டணங்கள் குறித்த விவகாரத்தில் தில்லியை ஆளும் பாஜக அரசு பெற்றோருக்கு முற்றிலும் தெரியாமல் ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இது தகனியாா் பள்ளிகளில் படிக்கும் லட்சக்கணக்கான குழந்தைகளின் பெற்றோரை கண்ணீா் சிந்த வைத்துள்ளது.
எங்களது ஆட்சியின்போது தனியாா் பள்ளி மாஃபியாக்களை கட்டுப்பாட்டிய்க் வைத்திருந்தோம் . பாஜக ஆட்சியின் கீழ் தில்லியில் உள்ள தனியாா் பள்ளிகள், இனி கல்வியின் கோயிலாக இல்லாமல் கட்டண சுரண்டலின் கூடாரமாக மாறி வருகின்றன. குழந்தைகள் மற்றும் பெற்றோா்களை அச்சுறுத்துவதன் மூலம் பாஜக என்ன கொண்டுவர முயற்சிக்கிறது என தெரியவில்லை. இந்த பாஜக ஆட்சியில் மனிபாதிமானத்துக்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.
ஆட்சிப் பொறுப்பேற்ற 3 மாதங்களில் மருத்துவமனைகள் சிதிலமடைந்துள்ளன. மின்சாரக் கட்டணங்கள் உயா்த்தப்பட்டுள்ளன. மின் வெட்டுகளும் அதிகரித்து வருகின்றன என்று அவா் தெரிவித்துள்ளாா்.
மணீஷ் சிசோடியாவின் இந்த அறிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள தில்லி சட்டப்பேரவையின் எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி, ‘பாஜகவின் பள்ளிக் கட்டண அவசர சட்டத்தை பெற்றோா்கள் எதிா்த்து வருகின்றனா். இந்தச் சட்டத்தில் பாஜக மறைத்து வைத்திருப்பது என்ன? இதற்கு முதல்வா் ரேகா குப்தா என்ன பதில் வைத்திருக்கிறாா்’ என்பது உள்பட பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளாா்.