"தனுஷ் காப்புரிமைக்கு பணம் வேண்டாம் என்றார்; பொருளாதார நெருக்கடியின்போதும்..." - வெற்றி மாறன்
வெற்றி மாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு 'விடுதலை' படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியிருந்தது. அப்படத்திற்குப் பிறகு அவர் சூர்யாவை வைத்து 'வாடிவாசல்' படத்தை இயக்கவிருப்பதாக முன்பே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், சில காரணங்களால் அப்படம் தாமதமாவதால், அப்படத்திற்குப் பதிலாக சிம்புவை வைத்து வேறொரு படத்தை எடுக்கவிருப்பதாகப் பேசப்பட்டது.

அதற்காக வெற்றி மாறன் மேற்கொண்ட ப்ரோமோ ஷூட் புகைப்படங்களும் கசிந்தன. அப்படமும் 'வடசென்னை' படத்தின் உலகத்திற்குள் வருவதால் தனுஷ் அதற்கான காப்புரிமைக்கு பணம் கேட்டதாக பேசப்பட்டது. அதை மறுத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் வெற்றி மாறன்.
அது குறித்து வெற்றிமாறன் பேசும்போது, "தனுஷ்தான் 'வடசென்னை' படத்தின் தயாரிப்பாளர். அப்படத்தின் இரண்டாம் பாகமோ அல்லது ஸ்பின்-ஆஃபோ எடுத்தால், அதன் காப்புரிமையைப் பெற வேண்டும்.
ஒருவர் காப்புரிமைக்காகப் பணம் கேட்பது சரியானதுதான். அதை எதிர்மறையான விஷயமாகப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. நான் சிம்புவைச் சந்தித்த மறுநாளே தனுஷிடம் பேசினேன்.
அவரிடம், 'இந்தப் படத்தை 'வடசென்னை' கதாபாத்திரங்களுடன் இணைத்தும் எடுக்க முடியும், தனியாகவும் இதைப் படமாக உருவாக்க முடியும்.

'வடசென்னை' படத்தின் காப்புரிமை உங்களிடம்தான் இருக்கிறது,' என்று கூறினேன். அதற்கு அவர், 'உங்களுடைய எண்ணத்திற்கு எது சரியாக இருக்குமோ, அதைச் செய்யுங்கள். நான் என் குழுவிடம் பேசி காப்புரிமையைத் தந்துவிடுகிறேன். அதற்கு எனக்கு பணம் எதுவும் வேண்டாம்,' என்று கூறிவிட்டார்.
எனக்கும் தனுஷுக்குமான உறவு ஒரு சம்பவத்தால் எளிதில் உடையக்கூடியது அல்ல. யூட்யூபில் என்னைப் பற்றியும் தனுஷைப் பற்றியும் பேசுவது எனக்குப் பிடிக்கவில்லை. என்னுடைய எண்ணங்களுக்கு அவர் ஒருபோதும் தடையாக இருந்ததில்லை.
சமீபத்தில் எனக்கு ஒரு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, ஒரு தயாரிப்பாளரிடம் அட்வான்ஸ் வாங்குவதற்கு தனுஷ் எனக்கு உதவி செய்தார். தனுஷ் எப்போதும் என்னைத் தொந்தரவு செய்யமாட்டார்.

சிம்புவுடன் நான் இணையும் செய்தியைச் சொன்னவுடன், தனுஷ், 'இது உங்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும். சிம்புவுக்கு உங்களுடன் இணைந்து படம் செய்வதும் ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.' என்று கூறினார்." என தெரிவித்தார்.