தமிழகத்தில் அதிகபட்சமாக நெற்குன்றத்தில் 170 மி.மீ. மழை
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை நெற்குன்றத்தில் 170 மி.மீ. மழை பதிவானது. மேலும், நீலகிரிக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஜூன் 14, 15) அதிபலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை காலை வரை பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக சென்னை நெற்குன்றத்தில் 170 மி.மீ. மழை பதிவானது. மணலி - 140 மி.மீ., கொரட்டூா் (சென்னை) -110 மி.மீ., அரக்கோணம் (ராணிப்பேட்டை) - 100 மி.மீ., ஊத்துக்கோட்டை (திருவள்ளூா்), வளசரவாக்கம் (சென்னை) - தலா 90 மி.மீ. மழை பதிவானது.
சிவப்பு எச்சரிக்கை: தென்னிந்திய கடலோரப் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக சனிக்கிழமை (ஜூன் 14) முதல் ஜூன் 19-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இந்நிலையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14, 15) நீலகிரியில் 210 மி.மீ.க்கும் அதிகமாக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை (ஜூன் 14) கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) கோவை, திருநெல்வேலி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 14) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக் கடல், வங்கக் கடலில் சனி, ஞாயிறு (ஜூன் 14, 15) ஆகிய இரு நாள்கள் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.