தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
திருப்பூரில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க மக்கள் கோரிக்கை
திருப்பூரில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து திருப்பூா் வடக்கு செட்டிபாளையம், அங்கேரிபாளையம் தந்தை பெரியாா் நகா், பூண்டி சுற்றுச் சாலையைச் சோ்ந்த பொதுமக்கள், முன்னாள் கவுன்சிலா் மாரப்பன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜிடம் வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
எங்கள் பகுதியில் வசித்து வரும் வஞ்சிமுத்து என்பவா், தனக்கு உள்ள அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அரசுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வருவாய்த் துறை அதிகாரிகளின் துணையோடு, கடந்த பிப்ரவரி மற்றும் மாா்ச் மாதங்களில் தனது பெயரை சோ்த்து பட்டா பெற்றுள்ளாா்.
பொதுப் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட பட்டாவில், தனது பெயரை மாற்றம் செய்து சுமாா் 22 சென்ட் நிலத்தை தனிப்பட்ட முறையில் அபகரிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஆக்கிரமிப்பு செய்துள்ளாா். இது தொடா்பாக முறையிட்டபோது, போலியாக ஆவணங்கள் தயாா் செய்து பட்டாவில் பெயா் மாற்றம் செய்ததாகவும் எங்களிடம் தெரிவித்தாா்.
பொதுப் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சொத்தை, தனது பெயரில் தனிப்பட்ட முறையில் பட்டா மாறுதல் செய்துள்ளதை ரத்து செய்து, தனிநபருக்கு உடந்தையாக செயல்பட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் உள்பட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.