தூத்துக்குடி: மதுபாட்டிலை மறைத்து வைத்த தோழி; ஆத்திரத்தில் கட்டையால் அடித்துக் கொன்ற இளைஞர்!
தூத்துக்குடி மாவட்டம், பண்டாரவிளையைச் சேர்ந்தவர் ஜெபா வைலட். இவர், தன் முதல் கணவருடன் விவாகரத்து பெற்ற நிலையில், இரண்டாவதாக அதே பகுதியைச் சேர்ந்த லிங்கராஜ் என்பவருடம் திருமணம் ஆகியுள்ளது.
இந்த நிலையில், தூத்துக்குடியில் உள்ள ராஜாஜி பூங்காவிற்கு வந்த போது மாரிக்கனி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் திருமணமாகி மனைவி மற்றும் குடும்பத்தினரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த சில நாள்களாக நெருங்கி பழகி வந்துள்ளனர்.

இந்த நிலையில், மாரிக்கனி, ஜெபா வைலைட்டை தான் வசித்து வரும் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது ஜெபா வைலைட், மாரிக்கனி வைத்திருந்த ஒரு மது பாட்டிலை மறைத்து வைத்தாகச் சொல்லப்படுகிறது.
மாரிக்கனி, மதுபாட்டிலைக் கேட்டுள்ளார். ஜெபா வைலைட் கொடுக்க மறுக்கவே இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த மாரிக்கனி, வீட்டில் கிடந்த உருட்டுக்கட்டையால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஜெபா வைலைட் மயங்கி விழுந்துள்ளார்.
பின்னர், மாரிக்கனி ஜெபாவைலைட்டை ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். தவறி கீழே விழுந்துவிட்டதாகச் சொல்லி சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் மாரிக்கனியின் முன்னுக்குப்பின் முரணான பேச்சினால் சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியர்கள், போலீஸாருக்கு தகவல் கூறினர். மாரிக்கனியிடம் நடத்திய விசாரணையில் கட்டையால் தாக்கியதை ஒப்புக்கொண்டார்.

அவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், உயிரிழந்தார். பின்னர் கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மாரிக்கனி மீது ஏற்கெனவே திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் இரண்டு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. குற்றவாளிகள் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளார். இச்சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
