நீலகிரி செல்வோர் கவனத்துக்கு... திருப்பி அனுப்பப்படும் வாகனங்கள்!
நீலகிரிக்கு வருகை தரும் வாகனங்களுக்கு இன்று(ஏப்ரல் 1) முதல் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்ட நிலையில், இ-பாஸ் பெறாத வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
நீலகிரியில் அளவுக்கு அதிகமான வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பதோடு, சுற்றுலாப் பயணிகள் குறித்த நேரத்துக்குள் சுற்றுலாத் தலங்களைப் பாா்வையிட முடியாமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும், உள்ளூர் மக்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வருகின்றனர்.
இதைக் கருத்தில் கொண்டு நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு நாள்தோறும் எத்தனை வாகனங்கள் வருகின்றன என்பது குறித்து ஆராய உயா்நீதிமன்றம் வல்லுநர் குழு அமைத்தது. அந்தக் குழு அளித்த பரிந்துரைப்படி வார நாள்களில் 6000 வாகனங்களுக்கும், வார இறுதி நாள்களில் 8000 வாகனங்களுக்கும் இ -பாஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று(ஏப். 1) நீலகிரிக்கு செல்வதற்கு நிர்ணயிக்கப்பட்ட இ-பாஸ் பகல் 12 மணியுடன் நிறைவடைந்ததால், இ-பாஸ் பெறாத வாகனங்களை திருப்பி அனுப்பும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா சோதனைச் சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 12 சோதனைச் சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் இ-பாஸ் வழங்க க்யூஆர் கோட் பதிவு செய்யப்பட்ட பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், ஆன்லைன் மூலமும் இ- பாஸை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: இன்றுமுதல் வருமான வரி மாற்றங்கள் அமல்: தெரிந்துகொள்ள வேண்டியவை!