செய்திகள் :

பணகுடி ஸ்ரீராமலிங்கேஸ்வரர் திருக்கோயில்: பச்சைப்புடவை சாத்தினால் திருமணவரம் தரும் சிவகாமி அம்பிகை!

post image

நம் தேசமெங்கும், ராமபிரான் தன் அவதாரத்தின்போது சிவபூஜை செய்த தலங்கள் ஏராளம் உள்ளன. அவ்வாறு ஸ்ரீ ராமர் வழிபட்ட சுவாமியை ராமநாதசுவாமி, ராமலிங்கசுவாமி என்று அடையாளப்படுத்தி ஆலயம் அமைத்து வழிபட்டுவருகிறார்கள் நம் முன்னோர்கள். அப்படி ஸ்ரீ ராமர் வழிபட்ட ஓர் அற்புத ஆலயம்தான் திருநெல்வேலி அருகேயுள்ள பணகுடி ஸ்ரீராமலிங்கசுவாமி ஆலயம்.

முற்காலத்தில் பாண்டியபுரம் என்று போற்றப்பட்ட இந்தத் தலத்தில் தற்போதைய பெயர்தான் பணகுடி. திருநெல்வேலி – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் திருநெல்வேலியிலிருந்து சுமார் 52 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது இத்தலம்.

சஞ்சீவி மலையுடன் அனுமன்
சஞ்சீவி மலையுடன் அனுமன்

அனுமன் சஞ்சீவி பர்வதத்தைச் சுமந்துவந்தபோது மருந்துமலையின் பல துகள்கள் தேசமெங்கும் விழுந்தன. அவையே சிறுசிறு மலைகளாக அமைந்தன. குறிப்பாக அவை மூலிகை வனங்களாகவும் விளங்கின. அந்த வகையில் உருவான ஒரு மலைச் சிகரம் தான் மகேந்திரகிரி. அந்தச் சிகரத்திலிருந்து புறப்படும் நதிக்கு `அனுமன் நதி’ என்றே திருப்பெயர்.

இந்த நதியின் கரையில்தான் மிக அழகுற அமைந்திருக்கிறது, பணகுடி சிவாலயம். இங்கே சந்நிதிகொண்டிருக்கும் சுவாமிக்கு அருள்மிகு ராமலிங்கேஸ்வரர் என்பது திருநாமம். அம்பிகை சிவகாமியம்மை.

ராவண வதம் முடிந்து இலங்கையிலிருந்து திரும்பிய ராமபிரான், இந்தப் பகுதியில் அனுமன் நதிக்கரையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

அதன் காரணமாகவே இங்குள்ள ஈஸ்வரனுக்கு ராமலிங்கேஸ்வரர் என்று திருப் பெயர் அமைந்ததாகச் சொல்கிறார்கள். ராமலிங்க சுவாமியை வழிபட்டால், 'தம் இன்னல்கள் தீருகின்றன' என்று தினந்தோறும் தவறாமல் வழிபடுகிறார்கள் உள்ளூர் பக்தர்கள்.

ஆதியில் இத்தலத்தில் ஈசன் மட்டுமே கோயில்கொண்டிருக்க அம்பிகையின் திருவுருவம் இல்லாமல் இருந்தது. அதன்பின் அருகே இருக்கும் கிராமம் ஒன்றில் கிணறு தோண்டும்போது அம்பிகை வெளிப்பட்டாள் என்றும் அந்த அம்பிகைக்கு சிவகாமி அம்பிகை என்று பெயர் சூட்டி இங்கே பிரதிஷ்டை செய்தனர் என்கிறது தலபுராணம்.

சிவகாமி அம்மை தோன்றிய அந்த ஊரின் பெயரும் `சிவகாமிபுரம்' என்று மாறிவிட்டது.

14-ம் நூற்றாண்டில் தென்காசிப் பகுதியை ஆட்சி செய்து வந்த உத்தம பாண்டியன் இந்த ஆலயத்தில் திருப்பணி செய்து புனரமைத்ததாகச் சொல்கிறார்கள். பாண்டியர் திருப்பணிக்கு சான்றாக ஆலயங்களில் மீன் சின்னங்கள் பல பொறிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீராமலிங்கேஸ்வரர் சிவகாமி அம்பிகை

சுவாமிக்கும் அம்பாளுக்கும் இங்கே தனித் தனி விமானங்கள் உள்ளன. கோயிலில் பரிவார மூர்த்தங்களாக விநாயகர், கன்னி விநாயகர், சரஸ்வதி, வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், சப்த கன்னியர், பைரவர், சனீஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர்.

பிரார்த்தனைச் சிறப்புகள்

சித்திரை மாதத்தின் கடைசி வியாழக்கிழமையன்று இரவு, பசும்பாலில் மிளகு சேர்த்து அரைத்து, சிவலிங்கத்துக்குச் சாற்றி, மறுநாள் வெள்ளிக்கிழமை பகல் 12 மணிக்கு அபிஷேகம் செய்தால், அந்த வருடம் நன்கு மழையும். விளைச்சல் பெருகும் என்பது நம்பிக்கை.

அதேபோல், தேய்பிறை அஷ்டமியில் இங்குள்ள பைரவருக்கு வடைமாலை சமர்ப்பித்து, வெண்பூசணியில் தீபம் ஏற்றினால், தீராத கடன் பிரச்னைகளும் தீருவதாக நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் பக்தர்கள்.

இங்கு கோயில்கொண்டுள்ள சிவகாமி அம்மையை மனதில் நினைத்துத் தொடங்கும் காரியங்கள் வெற்றியாகும் என்கிறார்கள்.

சிவகாமியம்மைக்குப் பச்சை நிறத்தில் பட்டுச்சேலை, பொட்டுத் தாலி, மல்லிகைப்பூ மாலை ஆகியவற்றை அணிவித்து, வேண்டிக்கொண்டால் திருமணத் தடை நீங்கி, விரைவில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

வசதி இல்லாதவர்கள் அம்பிகையை மனதார வழிபட்டாலே அவள் வேண்டும் வரத்தை விரைவில் அருள்வாள் என்கிறார்கள்.

ஸ்ரீராமர் வழிபட்ட ஈசன்
ஸ்ரீராமர் வழிபட்ட ஈசன்

இந்தக் கோயிலில் அருளும் வாராஹிதேவியை வழிபட்டால் தீவினைகள் நீங்கி நல்லவை நடக்கவும் என்கிறார்கள். மேலும், வாராஹிதேவிக்கு தலைவாழை இலையில் பச்சரிசி பரப்பி, அதில் தேங்காயில் விளக்கேற்றி வழிபட்டால், தீராத பிணிகளும் தீருமாம்.

ராமலிங்க சுவாமிக்கு தை மாதம் 10 நாள்கள் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. விழாவின் 9-ம் நாள் தேரோட்டமும் 10-ம் நாள் தெப்போற்சவமும் நடைபெறுகின்றன. ஐப்பசி மாதம் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.

இந்தக் கோயிலில் நம்பிசிங்க பெருமாளும் அருள்வது கூடுதல் சிறப்பு. அவருக்கு வைகாசி மாதம் 5 நாள்கள் வசந்தோற்சவமும், புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் கருடசேவையும், சித்ரா பௌர்ணமியன்று 1,008 திருவிளக்கு பூஜையும் நடைபெறுகின்றன.

திருநெல்வேலி செல்லும் அன்பர்கள் வாய்ப்பிருந்தால் இந்தப் பணகுடி திருத்தலத்துக்கும் சென்று, ராமலிங்கேஸ்வரரையும் சிவகாமி அம்மையையும் வணங்கி வாருங்கள். வாழ்வில் வெற்றிகள் தொடர்ந்துவரும்.

தஞ்சாவூர் மாவட்டம் திருமங்கலக்குடி: மாங்கல தோஷம் தீரும், சர்வ மங்கலங்களும் கைகூடும்!

மாங்கல்ய பாக்கியம் அருளும் தலங்கள் பல இருந்தாலும் அவற்றில் முக்கியமானது திருமங்கலங்குடி. இத்தலம் காவிரி வடகரைத் தலங்களில் 38-வது தலமாகும். இத்தலத்தினை அப்பர் மற்றும் சம்பந்தர் பாடியுள்ளனர். இந்த அற்பு... மேலும் பார்க்க

சபரிமலை வரும் ஜனாதிபதி திரெளபதி முர்மு - பம்பாவில் இருமுடிகட்டி ஐயப்பனை தரிசிக்கிறார்!

ஜனாதிபதி திரெளபதி முர்மு சபரிமலை சென்று ஐயப்ப சுவாமியை தரிசிக்க உள்ளதாக கடந்த மே மாதம் தெரிவிக்கப்பட்டது. அந்த சமயத்தில் புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களால் ஜனாதிபதி சபரிமலை வருகை ரத்துச் செய்யப்... மேலும் பார்க்க

திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோயில்: பூ வாக்குக் கேட்டுத் தொடங்கினால் சுபிட்சம் பெருகும்!

கோட்டை மாரியம்மன்கோட்டை மாரியம்மன் என்றதும் பலரின் நினைவுக்கும் வருவது திண்டுக்கல் மற்றும் சேலத்தில் இருக்கும் கோட்டை மாரியம்மன் கோயில்கள்தாம். ராணுவக் கோட்டைகளாக இருந்த இடத்தில் எழுந்தருளி இருக்கும் ... மேலும் பார்க்க

திருக்கோவிலூர் அருகே ஓர் திருவரங்கம்; ஞானம் கூடும், மன அழகும் தோற்றப்பொலிவும் கூடும்!

திருவரங்கம் என்றால் புண்ணிய நதியான காவிரிக்கு நடுவே அமைந்த தீவுப் பகுதி என்றும் அதில் திருமால் சயனத் திருக்கோலத்தில் அருள்வார் என்பதும் ஐதிகம். பஞ்சரங்கம்கர்நாடக மாநிலத்தில் அமைந்த ஸ்ரீரங்கப்பட்டினத்த... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டம் அறகண்டநல்லூர்: 1,300 ஆண்டுகள் பழைமையான தலம், சனி தோஷம் தீரும் அற்புதம்!

நம் தேசம் முழுவதும் உள்ள சிவத்தலங்களில் தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் முக்கியமானவை. அவற்றின் மகிமைகள் சொல்லில் அடங்காதவை. அப்படிப்பட்ட தலங்களைச் சென்று தரிசிக்கும்போதே நம் மனமும் ஆன்மாவும் மகிழ்வதை நம்மா... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர்: திருப்பதியிலிருந்து வந்த பட்டு வஸ்திரம்; ஆண்டாளுக்கு அணிவித்து சிறப்பு பூஜை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து திருப்பதி திருமலை புரட்டாசி பிரம்மோற்சவ திருவிழாவிற்கு கருட சேவையின்போது மலையப்ப சாமி அணிவதற்காக ஆண்டாள் சூடி களைந்த மாலை, பட்டு வஸ்திரம... மேலும் பார்க்க