Bison: "துருவை கபடி நேஷனல் டீமில் விளையாட கூப்பிடுவாங்க!" - பசுபதி கலகல பேச்சு
விழுப்புரம் மாவட்டம் அறகண்டநல்லூர்: 1,300 ஆண்டுகள் பழைமையான தலம், சனி தோஷம் தீரும் அற்புதம்!
நம் தேசம் முழுவதும் உள்ள சிவத்தலங்களில் தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் முக்கியமானவை. அவற்றின் மகிமைகள் சொல்லில் அடங்காதவை. அப்படிப்பட்ட தலங்களைச் சென்று தரிசிக்கும்போதே நம் மனமும் ஆன்மாவும் மகிழ்வதை நம்மால் உணரமுடியும். அப்படி ஒரு தலம்தான் அறகண்ட நல்லூர் எனப்படும் அறையணிநல்லூர்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டத்தில் அமைந்திருக்கும் இந்தத் திருத்தலம் சுமார் 1,300 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது.
தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 12வது தலம். திருஞானசம்பந்தர் இந்தத் தலத்துக்கு வந்து அறையணிநாதரைத் தொழுது இங்கே இருந்து அண்ணாமலையாரையும் பாடித் தொழுதார். இத்தலத்தில் சம்பந்தருக்கு ஈசன் ஜோதிரூபமாகக்காட்சி கொடுத்தார் என்கிறது தலபுராணம்.

'அறை' என்றால் 'பாறை.' பாறை மீது அழகாக அமைந்து அருள்பாலிப்பவர் என்பதால் இந்த ஈசனுக்கு அறையணிநாதர் என்கிற திருப்பெயரும் வந்தது என்கிறார்கள்.
புராண காலத்தில் இங்கு ஈசனுக்கு அதுல்யநாதேஸ்வரர் என்பது திருநாமம். இதற்கு ஒப்பிலாத ஈஸ்வரர் என்பது பொருளாகும். அம்பிகைக்கு அழகிய பொன்னழகி, சவுந்தர்ய கனகாம்பிகை என்பது திருநாமம்.
இத்தலம், மகாவிஷ்ணு ஈசனை வழிபட்ட தலம் என்கிறார்கள். மகாபலியைப் பாதாள லோகத்துக்கு அனுப்பியபின் பெருமாள் இங்கே வந்து ஈசனை வழிபட்டார் என்றும் அவரைத் தேடிவந்த மகாலட்சுமித் தாயாரும் இங்கேயே கோயில் கொண்டார் என்றும் சொல்கிறார்கள்.
அம்பாள் பொன்னழகி தனிச்சந்நிதியில் கிழக்கு நோக்கி தரிசனம் அருள்கிறார். இவரை வழிபட்டால் சகல விதமான செல்வங்களும் சேரும் என்கிறார்கள்.
திருமண வரம் வேண்டி வரும் பக்தர்களின் வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறுகிறது என்றும் புத்திர பாக்கியம் வேண்டினால் இந்த அன்னை உடனே அருள்வாள் என்றும் சொல்கிறார்கள் பலன் கண்ட பக்தர்கள்.
வேண்டுதல் நிறைவேறப் பெற்ற பக்தர்கள் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் நிவேதனம் செய்து தம் நன்றியைத் தெரிவிக்கிறார்கள்.

திருஞானசம்பந்தர் பாட திறந்த கதவு
திருஞானசம்பந்தர் இந்தத்தலத்திற்கு வந்தபோது, புற சமயத்தினரால் கோயில் அடைக்கப்பட்டிருந்தது. அப்போது சம்பந்தர் மனம் உருக ஈசனைப் பாட ஆலயத்தின் கதவுகள் திறந்தன. இதைக் கண்டு அஞ்சிய புற சமயத்தினர் விலகி ஓட சம்பந்தர் ஆலயத்துக்கு உள் வந்து மீண்டும் ஆலயத்தில் வழிபாடுகள் நடைபெற ஏற்பாடு செய்தார்.
சம்பந்தர் ஆலயத்துக்கு வெளியே இருந்து பதிகம் பாடியபோது அவர் சுவாமியை தரிசனம் செய்ய வசதியாக பிரதோஷ நந்தி வலதுபுறமாகவும், அதிகார நந்தி இடது புறமாகவும் சற்று சாய்ந்து கொடுத்ததாம். இன்றும் இவ்விரு நந்திகளும் இரு வேறு திசைகளில் திரும்பியபடியே உள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கு விநாயகப்பெருமான் வலம்புரி விநாயகராக அருள்பாலிக்கிறார். இவர் சுயம்புமூர்த்தி என்கிறார்கள். பிராகாரத்தில் முத்துக்குமாரர் ஒரு முகமும், ஆறு கரங்களும் கொண்டு விசேஷத் திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
ராமலிங்க வள்ளலார் இத்தலத்துக்கு வந்து இந்த சுவாமியைப் பாடி வணங்கியுள்ளார். இத்தலத்தில் விசேஷங்களில் ஒன்று மகாவிஷ்ணுவின் சந்நிதி. இங்கே மகாவிஷ்ணு கையில் பிரயோகச் சக்கரத்துடன் அருள்பாலிப்பது சிறப்பு.
ஸ்ரீதேவியின் கையில் உள்ள ஒரு தண்டத்தில் பறவை ஒன்று இருப்பது போலவும், அவளுக்கு இடப்புறத்தில் ஒரு பெண்ணும், வலப்புறத்தில் விலங்கு முகம் கொண்ட ஒரு ஆணும் இருக்க ஸ்ரீதேவி வித்தியாசமான கோலத்தில் அமர்ந்திருக்கிறாள்.
ரமண மகரிஷிக்கு ஜோதி ரூபமாகக் காட்சி
ரமண மகரிஷி திருவண்ணாமலை செல்லும் முன் இத்தலத்துக்கு வந்து இங்குள்ள ஈசனை வணங்கினார். அவருக்கு ஈசன் ஜோதி ரூபமாகக் காட்சி கொடுத்தார் என்கிறார்கள் பக்தர்கள்.
சனி தோஷம் தீர்க்கும்
மேலும் இத்தலம் சனி தோஷம் தீர்க்கும் தலமாகவும் திகழ்கிறது. இங்கு சனிபகவான் வலது காலை தூக்கி, காகத்தின் மீது வைத்தபடி வித்தியாசமான கோலத்தில் காட்சி தருகிறார். இவருக்கு அருகிலேயே மற்றொரு சனீஸ்வரர் நின்ற கோலத்தில் தனியாகவும் காட்சி அருள்கிறார். இவரை வணங்கினால் ஏழரை சனி, அஷ்டம சனி மற்றும் சனி தசா காலத்தில் உண்டாகும் தீமைகள் அனைத்தும் விலகும் என்கிறார்கள்.
இத்தகைய அற்புதமான தலத்துக்கு வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை சென்று வழிபட்டு வாருங்கள். ஈசனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.