கரூர் சம்பவம்: நீதிபதி குறித்து அவதூறு பதிவிட்ட தவெக நிர்வாகிக்கு ஜாமீன் - நீதிம...
திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோயில்: பூ வாக்குக் கேட்டுத் தொடங்கினால் சுபிட்சம் பெருகும்!
கோட்டை மாரியம்மன்
கோட்டை மாரியம்மன் என்றதும் பலரின் நினைவுக்கும் வருவது திண்டுக்கல் மற்றும் சேலத்தில் இருக்கும் கோட்டை மாரியம்மன் கோயில்கள்தாம்.
ராணுவக் கோட்டைகளாக இருந்த இடத்தில் எழுந்தருளி இருக்கும் மாரியம்மன்களுக்கு இந்தத் திருநாமம் பொதுவானது.
அந்த வகையில் திருப்பூரில் அமைந்திருக்கும் கோட்டை மாரியம்மன் கோயிலும் மிகவும் பிரசித்திபெற்றது. மேலும் இந்த ஆலயத்தில் பல முக்கிய சிறப்புகளும் உண்டு. வாருங்கள், அந்த அற்புதமான ஆலயத்தை தரிசிப்போம்.
திருப்பூர் புதிய பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள பிச்சம்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீகோட்டை மாரியம்மன் கோயில்.
சுமார் 500 ஆண்டுகளுக்கும் மேலான பழைமையை உடைய இந்த ஆலயம் விஜயநகர மன்னர்கள் மற்றும் நாயக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் திருப்பணி செய்யப்பட்டுப் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்கிறது தலபுராணம்.
என்றாலும் இங்கு கோயில்கொண்டுள்ள அம்மனின் சந்நிதியோ புராண காலத்துக்கும் முற்பட்டத்து என்கிறார்கள் பக்தர்கள்.

முப்பெரும் தேவியரும் அருள் தரும் ஆலயம்
இங்கே கருவறையில் விசேஷமாக துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரும் இணைந்த திருக்கோலத்தில் அழகுடன் காட்சி தருகிறாள் கோட்டை மாரியம்மன்.
திருமுகத்தில் லட்சுமி கடாட்சம் பொங்க, யோக நிலை ஸ்ரீசரஸ்வதி தேவியின் அம்சமாகவும், ஆயுதம் ஏந்திய நிலை ஸ்ரீதுர்கையின் அம்சமாகவும் அம்பிகை திகழ்வதை தரிசிப்பது கண்கொளாக் காட்சியாகும்.
இந்த அம்பிகையின் சந்நிதியின் நின்று வேண்டிக்கொண்டால் சகலவிதமான தோஷங்களும் தீரும். செல்வம், செல்வாக்கு, ஆரோக்கியம் ஆகியன கிடைக்கும் என்கிறார்கள்.
இங்கே இந்த அம்மன் கோயில்கொண்ட திருக்கதை அற்புதமானது. விவசாயி ஒருவர் நிறைய பசுக்களை வளர்த்து வந்தார். தினமும் மேய்ச்சலுக்குச் சென்றுவரும் பசுக்களிடம் பால் கறந்து பயன்படுத்துவார். ஆனால் ஒரு பசுவின் மடி மட்டும் பால் இன்றி வற்றி இருக்கும். பாலை யாரோ திருடுகிறார்கள் என்று நினைத்து ஒருநாள் பசுவைப் பின் தொடர்ந்து சென்றார் விவசாயி.
ஆனால் பசுவோ ஓர் இடத்தில் நின்று தானே பாலைப் பொழிந்தது. அந்த இடத்துக்கு அருகில் அவர் சென்றபோது, அங்கே ஒரு விளக்கைக் கண்டார். யாருமற்ற இடத்திலிருந்த விளக்கைக் கண்டதும் அச்சம் தோன்ற வீட்டுக்கு வந்துவிட்டார்.
அன்று இரவு அவர் கனவில் தோன்றிய தேவி, தானே அங்கு தோன்றியிருப்பதாகவும் தன்னைக் கண்டு எடுத்துக் கோயில் அமைக்குமாறும் கட்டளையிட்டாள். இதைக் கேட்டதும் விழித்தெழுந்த விவசாயி விடிந்ததும் இந்தச் செய்தியை ஊர் மக்களிடம் கூறினார்.
மக்கள் அனைவரும் கூடிவந்து அங்கே இருந்த பகுதியில் தோண்டிப் பார்க்க அம்மனின் சிலை வெளிப்பட்டது. அதையே மூலவராகக் கொண்டு இன்றளவும் வழிபாடு செய்துவருகிறார்கள் பக்தர்கள்.

இத்தலத்தில் புலி சுட்டுப்பட்டான் கல் என்று ஒன்று உள்ளது. ஒருகாலத்தில், இந்த ஊருக்குள் புலி புகுந்து, மக்களை பயத்தில் கிடுகிடுக்கச் செய்தது. அந்தப் புலியுடன் சண்டையிட்டுக் கொன்று, அந்தப் போராட்டத்தில் உயிர் நீத்த வீரன் ஒருவனின் நினைவாக இங்கு ஒரு நடுகல் வைக்கப்பட்டதாம். அந்த வீரனே காவல் தெய்வமாக இருப்பதாக ஐதிகம். இங்கு நின்று வேண்டிக்கொண்டால் மன பயம் விலகும் என்கிறார்கள்.
பிரார்த்தனை சிறப்புகள்
இத்தலத்துக்கு வந்து வேண்டிக்கொண்டால் திருமணத் தடை, தொழிலில் நஷ்டம், குடும்பத்தில் பிரச்னை என எதுவாக இருந்தாலும் விரைவில் விலகி நலம் பிறக்கும்.
செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளிலும், மாதாந்திர அஷ்டமி நாள்களிலும் தொடர்ந்து 12 வாரங்கள் வந்து, அம்மனுக்குத் திரிசதி அர்ச்சனை செய்து, நெய் தீபமேற்றி வழிபட்டால், கல்யாண வரம், பிள்ளை பாக்கியம் கைகூடும்; தொழிலில் லாபம் மேலோங்கும்.
சுற்றியிருக்கும் கிராமத்து மக்கள் எதைத் தொடங்குவதாக இருந்தாலும் இந்த அம்மனிடம் பூ வாக்குக் கேட்டே செய்கிறார்கள். அவ்வாறு செய்தால் தொடங்கும் காரியங்கள் சுபிட்சமாக முடியும் என்பது நம்பிக்கை.

பரிவார தெய்வங்கள்:
கோயிலில் உள்ள நாகர் சந்நிதி மிகவும் சக்தி வாய்ந்தது என்கின்றனர் பக்தர்கள். வெள்ளிக்கிழமை ராகு கால வேளையில், இங்கு வந்து நாகருக்குப் பாலபிஷேகம் செய்து வேண்டிக் கொண்டால், நாக தோஷம் விலகும்.
தவிர, இங்கே உள்ள நவகிரகங்கள், தம்பதி சமேதராக அமைந்திருப்பதும் சிறப்புக்கு உரிய ஒன்று. ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசப்த கன்னியர், ஸ்ரீகருப்பராயன், ஸ்ரீவள்ளி- தெய்வானை சமேத சுப்ரமணியர் ஆகியோரும் சந்நிதி கொண்டிருக்கின்றனர்.
கோயில் காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.