`எகிப்த்தில் திரையிடப்பட்ட முதல் தமிழ் சினிமா வீரபாண்டிய கட்டபொம்மன்தான்' - பி.ஆ...
பர்கூர்: விவசாயியைத் தாக்கி 22 பவுன், ரூ.50,000 கொள்ளை! மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
பர்கூர் அருகே வீட்டில் புகுந்து விவசாயியைத் தாக்கி, 22 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்ற முகமூடி அணிந்த மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை அடுத்த தண்ணீர்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுந்தரேசன் (55). இவரது மனைவி மஞ்சுளா(50).
கணவன் - மனைவி இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று(பிப்.13) அதிகாலை 5 மணி அளவில் வீட்டின் கதவைத் தட்டும் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்டு எழுந்த சுந்தரேசன் கதவைத் திறந்த போது, முகமூடி அணிந்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த சுந்தரேசன் கூச்சலிட்டுள்ளார்.
இதையடுத்து மர்ம நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுந்தரேசனை தாக்கியதில் அவருக்கு கையில் வெட்டு காயம் ஏற்பட்டது. அப்போது வெளியே வந்த அவரது மனைவி மஞ்சுளாவையும் முகமூடி அணிந்த நபர்கள் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.
இதையும் படிக்க.... திரிவேணி சங்கமத்தில் 14.7 லட்சம் பக்தர்கள் புனித நீராடல்!
பின்னர், 2 பேரையும் கத்தியைக் காட்டி மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த மற்றும் வீட்டில் இருந்த 22 பவுன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு, வீட்டில் வைத்திருந்த ரூ.50 ஆயிரத்தையும் கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
இந்தக் கொள்ளைச் சம்பவத்திற்கு முன்னதாக, முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் வீட்டின் மின் இணைப்பு மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் இணைப்புகளை துண்டித்துள்ளனர். கொள்ளையர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த சுந்தரேசனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பர்கூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
கொள்ளைச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, பர்கூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் முத்துகிருஷ்ணன் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து, கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்தனர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்களை பிடிக்க ஊத்தங்கரை மற்றும் பர்கூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பூட்டியிருந்த வீட்டிலிருந்தவர்களைத் தாக்கி பணம் மற்றும் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பர்கூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.