பாலியல் குற்றச்சாட்டு: ``நான் கூறிய தவறால் வருந்துகிறேன்'' - பகிரங்க மன்னிப்பு கேட்ட பஜ்ரங் புனியா
2023-ம் ஆண்டு அப்போதைய WFI தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து மல்யுத்த வீரர்கள் ஜந்தர் மந்தரில் போரட்டம் நடத்தினர்.
அப்போது அளித்த ஒரு பேட்டியில் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, பிரிஜ் பூஷண் சரண்சிங்மீதான் விமர்சனத்தின் போது மல்யுத்த பயிற்சியாளர் நரேஷ் தஹியாவையும் இணைத்து ``நரேஷ் தஹியா ஒரு பாலியல் வன்கொடுமை குற்றவாளி, எனவே எங்களைக் கேள்வி கேட்க அவருக்கு எந்த உரிமையும் இல்லை" எனப் பேசினார்.

இது தொடர்பாக விவாதமான நிலையில், பயிற்சியாளர் நரேஷ் தஹியா நீதிமன்றத்தில், ``என் மீது இருந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறி நீதிமன்றம் பாலியல் வழக்கிலிருந்து விடுவித்த நிலையிலும், என் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறார் பஜ்ரங் புனியா" எனக்குறிப்பிட்டு அவதூறு வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக நான்காவது விசாரணையில் பஜ்ரங் புனியாவுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
இந்த நிலையில் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா பகிரங்க மன்னிப்புக் கேட்டிருக்கிறார். நரேஷ் தஹியாவுக்கு ஏற்பட்ட வலி மற்றும் சேதத்திற்கு நான் மிகவும் வருந்துகிறேன். அவருக்கு எதிராக நான் கூறிய தவறான செய்தியால் அவருக்கு நெருங்கிய, அன்பானவர்களுக்கு ஏற்பட்ட காயத்திற்கு நான் மிகவும் வருந்துகிறேன். நரேஷ் தஹியா ஒரு புகழ்பெற்ற பயிற்சியாளர்.
நாட்டிற்கு தனது சிறந்ததை வழங்கியவர். மீண்டும் ஒருமுறை எனது வருத்தத்தை தெரிவித்து, நரேஷ் தஹியா மற்றும் அவரது அன்புக்குரியவர்களிடம் மனமார்ந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய நரேஷ் தஹியா, ``டெல்லியில் நடந்த போராட்டத்திற்கு இரண்டு அல்லது நான்கு மாதங்களுக்கு முன்பு, அப்போதைய WFI தலைவரைப் புகழ்ந்து கொண்டிருந்தனர். பின்னர் திடீரென்று, இதெல்லாம் நடந்தது.
என் மீது ஒருவரின் பாலியல் குற்றச்சாட்டை பஜ்ரங் புனியா தனது உரையில் குறிப்பிட்டார். இப்போது அவர் மன்னிப்பு கேட்டதால், நான் அதை ஏற்றுக்கொண்டேன். அவரது வழக்கறிஞர் மன்னிப்பு கேட்க என் வழக்கறிஞரைத் தொடர்பு கொண்டார். பிரிஜ் பூஷனுடன் எனக்கு அதிக தொடர்பும் இல்லை." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.