முதல் டெஸ்ட்: இரட்டை சதம் விளாசிய கருண் நாயர்; இந்தியா ஏ 557 ரன்கள் குவிப்பு!
இங்கிலாந்து லயன்ஸுக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணி முதல் இன்னிங்ஸில் 557 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பாக, இந்தியா ஏ அணி இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இரண்டு அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
இதையும் படிக்க: இளம் இந்திய அணி இங்கிலாந்தில் சாதிக்குமா? ஏபி டி வில்லியர்ஸ் கூறுவதென்ன?
இரட்டை சதம் விளாசிய கருண் நாயர்
இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு இடையேயான முதல் அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டி நேற்று (மே 30) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்தியா ஏ அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது.
முதல் நாளில் இந்தியா ஏ அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 409 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. இந்த நிலையில், இரண்டாம் நாளான இன்று இந்தியா ஏ அணி 557 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்தியா ஏ அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கருண் நாயர் இரட்டை சதம் விளாசி அசத்தினார். அவர் 281 பந்துகளில் 204 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 26 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, துருவ் ஜூரெல் (94 ரன்கள்), சர்ஃபராஸ் கான் (92 ரன்கள்), ஹர்ஷ் துபே (32 ரன்கள்) எடுத்தனர்.
இங்கிலாந்து லயன்ஸ் தரப்பில் ஜோஷ் ஹல் மற்றும் ஸாமன் அக்தர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். எடி ஜாக் இரண்டு விக்கெட்டுகளையும், அஜீத் டேல் மற்றும் ரிஹான் அகமது தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: கைவிரல் முறிவு; மே.இ.தீவுகள் தொடரிலிருந்து விலகும் இங்கிலாந்து ஆல்ரவுண்டர்!
இங்கிலாந்து லயன்ஸ் அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.