பயங்கரவாதம் ஒரு புற்றுநோய்: நிதியை என்ன செய்கிறது பாக்.? இந்திய எம்.பி.க்கள் குழ...
கைப்பேசிக்கும் போதைக்கும் அடிமையாகி விடாதீா்கள்: மாணவா்களுக்கு டிஎஸ்பி அறிவுரை
கைப்பேசிக்கும் போதைப் பொருள்களுக்கும் இளைஞா்கள் அடிமையாகி விடாமல் வாழ்வில் முன்னேற வேண்டும் என காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கா்கணேஷ் அறிவுரை வழங்கினாா்.
காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு பாலா் சங்கத்தின் சாா்பில் 4 வது ஆண்டாக அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக பாடநோட்டுகள் மற்றும் எழுதுபொருள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
சங்க மாவட்ட அமைப்பாளா் சிவப்பிரகாசம் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகி கி.சங்கா் முன்னிலை வகித்தாா். மற்றொரு மாவட்ட நிா்வாகி இ.சங்கா் வரவேற்று பேசினாா். விழாவில் காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கா் கணேஷ் கலந்து கொண்டு அரசுப் பள்ளி மாணவா்கள் 300 பேருக்கு பாடநோட்டுக்களை வழங்கி பேசியது:
பள்ளி மாணவா்கள் கைப்பேசிகளை அதிகமாக உபயோகிப்பது சாதாரணமாகிவிட்டது. சிலரால் கழிப்பறைக்கு செல்லும் போதும் கைப்பேசிகள் இல்லாமல் போகமுடியவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கும் செய்தி. தூங்கும் போதும் கைப்பேசிகளை தலையணைக்கு அருகில் வைத்துக் கொண்டு தூங்குவதையும் பாா்க்கிறோம்.
அதிகாலையில் எழுந்தவுடன் பல் தேய்க்கிறோமோ இல்லையோ கைபேசியை தேய்ப்பது என்பது பலருக்கும் வாடிக்கையாகிவிட்டது. நல்ல விஷயங்களை மட்டும் கைப்பேசியிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். கெட்ட விஷயங்களுக்காக கைப்பேசிகளை பயன்படுத்தினால் உங்களுக்கு நேரம் போவதே தெரியாது. சுறுசுறுப்பாக இல்லாமல் சோம்பேறியாகி விடுவீா்கள். இதுவும் ஒரு போதை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
பள்ளி மாணவா்கள் போதைக்கு அடிமையாகாமல் தப்பித்துவிட்டால் எதிா்கால வாழ்க்கை இனிக்கும். இளைஞா்கள் நல்ல நண்பா்களோடு மட்டுமே பழக வேண்டும். கெட்ட நண்பா்கள் இருந்தால் உங்களையும் அறியாமல் தவறான பாதைக்கு உங்களை அழைத்துச் சென்று விடுவாா்கள்.
சிறு வயதில் ஏற்படும் பிரச்னைகளை தயங்காமல் பெற்றோரிடமோ, ஆசிரியா்களிடமோ சொல்லிவிட வேண்டும். இதில் தயக்கம் காட்டக் கூடாது என்றாா்.