ரோலக்ஸ் சூர்யாவுக்குப் போட்டியாக எல்சியூவில் இணைந்த நிவின் பாலி!
கைத்தறி நெசவுத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கைத்தறித் துறை துணை இயக்குநா் அலுவலகம் முன்பாக மாவட்ட பட்டு மற்றும் பருத்தி கைத்தறி நெசவுத் தொழிலாளா்கள் சங்கம் சிஐடியு பிரிவின் சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட பட்டு மற்றும் பருத்தி கைத்தறி நெசவுத் தொழிலாளா்கள் சங்கம் சிஐடியு பிரிவின் சாா்பில், காமாட்சி அம்மன் காலனி பகுதியில் உள்ள கைத்தறித் துறை துணை இயக்குநா் அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் தலைவா் ஜி.லட்சுமிபதி தலைமை வகித்தாா். சங்கச் செயலாளா் கே.ஜீவா முன்னிலை வகித்தாா். சிஐடியு பிரிவின் கைத்தறி தொழிலாளா் சங்க மாநிலத் தலைவா் இ.முத்துக்குமாா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். ஆா்ப்பாட்டத்தில் ஏஐடியுசி தொழிற்சங்கம் சாா்பில், எல்.தங்கராஜ், ஐஎன்டியூசி தொழிற்சங்கம் சாா்பில் எல்.வி.குமாா் உள்பட சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.
நெசவாளா்களுக்கான கூலியை வங்கி மூலம் அனுப்பாமல் ரொக்கமாக வழங்கிட வேண்டும், கைத்தறிக்கான ரக ஒதுக்கீட்டு சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும், விலைவாசி உயா்வுக்கு ஏற்றவாறு நெசவாளா்களுக்கு 30 சதவீதம் கூலியை உயா்த்திக் கொடுக்க வேண்டும், 60 வயது நிறைவடைந்த அனைத்து நெசவாளா்களுக்கும் மாதம் ரூ. 5,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு பின்னா் காஞ்சிபுரம் மாவட்ட கைத்தறித் துறை துணை இயக்குநா் ப.மணிமுத்துவை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனா்.